மிக சக்திவாய்ந்த ஆயுதத்தை வெளிக்கொணர்ந்த ஈரான்.. ட்ரம்பை திணற வைக்கும் அணுசக்தியை விஞ்சிய யுக்தி!
பல தசாப்தங்களாக ஈரானின் அணுசக்தி மையங்களை மட்டுமே குறிவைத்து வந்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இப்போது ஒரு புதிய உண்மை தெரிய வந்துள்ளது.
ஈரானிடம் இருக்கும் உண்மையான அணு ஆயுதம் ஏவுகணைகள் அல்ல, அது 'ஹோர்முஸ் நீரிணை' எனும் கடல் வழிப்பாதை தான் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வித நேரடி உடல் ரீதியான அழிவுகளும் இன்றி, உலகளாவிய வர்த்தகத்தை முடக்கும் இந்த உத்தி, அமெரிக்காவை தனது மூலோபாயங்களை மாற்றியமைக்க கட்டாயப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
பல தசாப்தங்களாக, ஈரானின் அணுசக்தி திட்டமே பிராந்தியத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் பார்க்கப்பட்டது.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் ஏவுகணைத் தளங்களைச் சேதப்படுத்தின.
இருப்பினும், இந்த மோதல்கள் ஈரானிடம் ஏற்கனவே ஒரு வலிமையான ஆயுதம் இருப்பதை நிரூபித்துள்ளன. உலகின் கடல்வழி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20வீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
அணு ஆயுதங்கள் பேரழிவின் மூலம் அச்சுறுத்துகின்றன, ஆனால் ஹோர்முஸ் நீரிணையை முடக்குவது என்பது பொருளாதார ரீதியாக அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஈரான் தனது கடற்படை மூலம் சில எச்சரிக்கைகளை விடுத்து, ஒருசில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியவுடனேயே, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்கள் பின்வாங்கினர். இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 110 டொலர்கள் என்ற அபாயக் கோட்டைத் தாண்டியது.
சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல்..
ஈரானின் இந்த 'ஹோர்முஸ் ஆயுதத்தை' எதிர்கொள்ள, அமெரிக்கா தனது கவனத்தை வான்வழித் தாக்குதல்களிலிருந்து கடற்படை நடவடிக்கைகளுக்கு மாற்றியுள்ளது.

அமெரிக்க கடற்படை ஹோர்முஸ் மற்றும் அரபிக்கடலுக்கு இடையே போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது. இது வெறும் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமல்லாமல், அந்தப் பாதையை 'சொந்தம்' கொண்டாடும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா 'சுங்கக் கட்டணம்' (Toll) வசூலிக்க தகுதியுடையது என்று குறிப்பிட்டிருப்பது, இந்தப் பகுதியின் மீதான அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உணர்த்துகிறது.
கண்ணிவெடிகளை அகற்றுவது மற்றும் 'கடற்பயண சுதந்திரம்' (Freedom of navigation) என்ற பெயரில் அமெரிக்கா அங்கு நிரந்தரமாக முகாமிடுவது, ஒரு அமெரிக்க நீர்நிலையைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிக்கலில் அமெரிக்கா..
ஈரானின் இந்த சவாலை முறியடிப்பது என்பது அமெரிக்காவிற்கு ஒரு நீண்ட காலப் போராட்டமாக அமையும் எனவும் இதற்கான சில முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளனர் ஆய்வாளர்கள்.

CENTCOM அமைப்பின் பல விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் நிரந்தரமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது உலகின் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை பாதிக்கலாம்.
ஈரானின் சிறிய ரகத் தாக்குதல் படகுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எண்ணெய் விலை உயர்வைத் தவிர்க்க, புதிய குழாய் இணைப்புகளை உருவாக்க பல ஆண்டுகள் மற்றும் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும். மேலும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் இணைந்து மாற்று எரிசக்தி திட்டங்களில் அமெரிக்கா பணியாற்ற வேண்டியிருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், ஹோர்முஸ் நீரிணையை ஒரு 'பாதுகாவலராக' அமெரிக்கா தன் வசம் வைத்திருக்க நினைத்தால், அது பல தசாப்த கால இராணுவ மோதல்களுக்கும், எரிசக்தி நெருக்கடிகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.