மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சி! 16 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala sirisena) விவசாய அமைச்சராக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு, அவரை கொலை செய்யும் நோக்கில், தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகள் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயம் இந்த வாரம் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு தெரியவந்துள்ளது.
கடந்த புதன்கிழமையன்று, இது தொடர்பான விசாரணை ஆரம்பித்தபோது, "மொரிஸ்" என்ற செல்வராஜா கிருபாகரன் மற்றும் "தனுஷ்" என்ற தம்பியா பிரகாஷ் ஆகிய இருவரின் சட்டத்தரணிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பிணையில் அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை கோரினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை
எனினும், அரச சட்டத்தரணி தம்மிக்க உதவத்த, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்த்தார், இந்த ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட, பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை எந்த நிபந்தனையின் கீழும், பிணையில் அனுமதிக்குமாறு பிரதிவாதிகள் கோரியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை ஆரம்பித்துள்ளத்தால், அவர்களுக்கு இப்போது பிணை வழங்க்கப்பட்டால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும் என்று உடவத்த கூறினார்.
முன்னதாக, 2008, ஒக்டோபர் 9 ஆம் திகதியன்று, மைத்ரிபாலவை இலக்கு வைத்து, கொழும்பு பொரலஸ்கமுவவில் நடந்த தாக்குதலில் சிறிசேனவின் பாதுகாப்பு அதிகாரிகள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மைத்திரிபால சிறிசேன
சண்முகராசா கஜவலினி என அடையாளம் காணப்பட்ட தற்கொலை குண்டுதாரி, சிறிசேனவை கொலை செய்யும் நோக்கில் தாக்குதலை நடத்த உதவியதாகவும், உடந்தையாக செயல்பட்டதாகவும் உட்பட 17 குற்றச்சாட்டுகளின் கீழ், குறித்த இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், அதன் பிறகு சுமார் இரண்டு வாரங்கள் கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து எந்த பொலிஸ் அதிகாரியும் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை என்றும் சிறிசேன குறிப்பிட்டார்.
தாக்குதல்
குறித்த தாக்குதலை நினைவுகூர்ந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, கையடக்க தொலைபேசியில் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த போது, ஒரு பெண் தங்கள் வாகனத்தை நோக்கி வேகமாக நடந்து வருவதைக் கவனித்த பின்னர் தனது ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறினார்.
ஓட்டுநரின் விரைவான செயல்களால் குண்டுதாரி தனது வாகனத்தை இடைமறிக்க முடியவில்லை, எனினும். சிறிசேனவின் வாகனத்துக்கு பின்னால் பயணித்த காப்பு வாகனத்தை மோதி, அவர் வெடிக்கச் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
இந்த சம்பவம் 2008 ஆம் ஆண்டு நடந்தாலும், 2023, டிசம்பர் 18 ஆம் திகதியே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, இதேவேளை, வழக்கின் மேலதிக விசாரணை செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
