கொழும்புக் கிளர்ச்சியில் கோட்டைவிட்ட தமிழர் தரப்பு
இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் போராடித்தான் வாழ்கின்றன. அனைத்து ஜீவராசிகளும் நான்கு முக்கிய அம்சங்களுக்காக போராடுகின்றன.
அவை பாதுகாப்பு, உணவு, உறைவிடம் - பிரதேசம், இணை சேர்தல் இவற்றுக்காக ஜீவராசிகள் இடையூறாது போராடுகின்றன.
மனிதனும் ஒரு ஜீவி என்ற அடிப்படையில் இது மனிதனுக்கும் பொருந்தும். போராடாத எந்த ஜீவியும் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்த வரலாறு கிடையாது.
கொழும்பு கிளர்ச்சியாளர்கள் மீது ஆட்சியாளர் படைப் பலத்தை பிரயோகிக்காது பதவிவிலகல்
அந்த அடிப்படையில் இன்றைய இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடியின் விளைவால் விளைந்த அரசியல் கொதிதளத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களுக்கான இடத்தை அல்லது வகிபாகத்தை உள்நாடு, அண்டை நாடு, பன்னாட்டு அரசியற் பேசுதளத்தில் தமக்குரிய இடத்தை வகிக்க தமிழ்த்தரப்பினர் தவறி விட்டனர். கொழும்பு கிளர்ச்சி தமிழ் மக்களுக்கு போராடுவதற்கான பல வழிகளையும் இப்போது திறந்து விட்டுள்ளது. கொழும்பு கிளர்ச்சியாளர்கள் மீது இலங்கை ஆட்சியாளர் எந்தவித படைப் பலத்தையும் பிரயோகிக்காது பதவிவிலகினர்.

இந்த தருணத்தில் தமிழர்கள் தமக்கே உரித்தான உரிமைக்காக போராடினால் அதற்கு இனவாத அரசு தனது படை பிரியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. போர்க்காலச் சூழலில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் பிரித்து ஓதி பீரங்கிகளுக்கு மந்திர நூல் கட்டி வழியனுப்பிய பௌத்த துறவிகளால் இப்போது அதனைச் செய்ய முடியாது. எனவே “வாய்ப்புகளை கையாளும் கலைதான் அரசியல்“ அந்த அடிப்படையில் "கல் கிடைக்கும் வரை நாயுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" ஓடுகின்ற நாயைத் துரத்து, உன்னைத் துரத்துகின்ற நாய்க்கு கல்லெறி" என்றொரு கூற்றுண்டு.
இவை அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமான வாக்கியங்கள். இந்தத் தருணத்தில் தமிழ் மக்கள் இவ்வாக்கியங்களை பொருத்தமான இடத்தில் பயன்பாட்டுக்கு உரியதாக்கி இருக்க வேண்டும். இத்தருணத்திற்தான் தங்களுடைய உரிமைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்க வேண்டும். ஆனால் அதனை நம்மவர் மத்தியில் உள்ள சோம்பேறி அரசியல்வாதிகளும், ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் எதனையும் செய்யாமல் அந்நேரத்தில் தமிழ் மக்களையும் எதையும் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியும் விட்டனர்.
இது மாபெரும் சமூகவிரோத குற்றமும், வரலாற்றுத் தவறுமாகும். தமிழ் மக்களின் போராட்டம் கடந்த 13 வருடங்களா தேக்க நிலையில் கிடக்கிறது. தமிழ் மக்களை பொறுத்த அளவில் ராஜபக்சர்களை பழிவாங்குவதும், அவர்களை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதும், அதனால் மகிழ்ச்சி அடைவதிலும் எந்தப் பயனும் கிடையாது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு ராஜபக்சர்களே காரணம்
அரசியலில் வெறும் அற்ப சொற்ப மனவிருப்பங்களுக்கு இங்கு இடமில்லை. தமிழ் மக்களுடைய அபிலாசை இலங்கை தீவில் தமிழ் மக்களின் பல்லாயிரம் ஆண்டுகால ஒளிமயமான எதிர்கால வாழ்க்கை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ராஜபக்சர்கள் போனால் இன்னும் ஆயிரம் ராஜபக்சர்கள் சிங்கள தேசத்தில் பிறப்பெடுத்து வருவார்கள்.
எனவே தமிழ் மக்கள் தங்களுடைய சுபீட்சமான அரசியல் அபிலாசைகளை குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர வெரும் மனவிருப்பிற்கும் சிறுபுத்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது. இங்கே விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்களுடைய இலட்சியம் கண்ணுக்குத் தெரிய வேண்டுமே தவிர எதிரியின் துன்பமும், அவனுடைய வீச்சியும் அல்ல.

எனவே இன்றைய இலங்கை அரசியல் மேற்படி எதிரியின் களத்தில் ஏற்பட்ட கொதிநிலையில் அதன்வாயிலாக தமிழ் மக்களுக்கான வழிகளும் வாய்ப்புகளும் அகலத் திறந்திருப்பதை கவனத்திற் கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும்.
இந்தவகையில் தமிழ் மக்கள் தடைகளை உடைத்து தமக்கான உரிமைக்குரலை எழுப்புவதற்கான தருணம் இன்னும் தவறிப்போகவில்லை. இன்று இலங்கைதீவு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியும் பட்டினி சாவிலும் இருந்து பாதுகாக்க அனைத்துக் கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கத்தை உருவாக்க சிங்கள தேசம் முனைகின்றது. அந்த தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தமிழ் தலைமைகள் தயார் என்றும் கூறுகின்றன.
அவ்வாறு தயார் என்று கூறுவது அமைச்சர் பதவிகளை பெறுவதற்காக மாத்திரமாக அமைந்துவிடக் கூடாது. கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளை பெற்று தமிழ் அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். எனவே அந்த தேசிய அரசாங்கம் அமைக்கின்றபோது அதில் தமிழ் மக்களுக்கான உள்நாட்டு -- வெளிநாட்டு நிதி அதிகாரத்துடன் கூடிய ஒரு அதிகார சபையை வலியுறுத்திப் பெறுவதுதான் சரியானதாகும்.
ஈழத் தமிழர்கள் தமக்கான வடகிழக்கு அதிகார சபையை கோரி போராட வேண்டும்
அதுவே இன்றைய சூழலில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவும் அமைந்திட முடியும். ஈழத் தமிழர்கள் தமக்கான வடகிழக்கு அதிகார சபையை கோரி போராட வேண்டும். இந்த வடகிழக்கு அதிகார சபைக்கான நிதி, நிர்வாக அதிகாரத்தை பெற்றால் பெருந்தொகை நிதியை இலங்கைத் தீவிற்குள் கொண்டு வந்து சேர்க்க முடியும் என்ற யதார்த்தத்தை முன்வைத்து போராடுவதும் அவசியமானது.
அது சாத்தியமானது என உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்களின் பொருளாதாரத்தால் வடக்கு - கிழக்கை கட்டுமானம் செய்ய முடியும். அந்தக் கட்டுமானத்தின் விளைவால் இலங்கையின் பொருளாதாரத்தையும் மீழ்கட்டுமானம் செய்ய முடியும் என்பதை சிங்கள மக்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில் சிங்கங்களின் கோட்டைக்குள் நின்று தமிழ் மக்கள் போராட வேண்டும்.
இன்றைய இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்ட இனவழிப்பு யுத்தமே. இந்த இனவழிப்பு யுத்தத்திற்கு ஒரு அரசியல் தீர்வு காணாமல், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை கொடுக்காமல், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணமுடியாது. அதை வலியுறுத்த கூடிய வகையில் கொழும்பில் போராட்டத்தை தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையேல் சிங்கள மக்களுக்கு உரிமை கிடையாது. தமிழ் மக்களுக்கு அமைதி இல்லையேல் சிங்கள மக்களுக்கும் அமைதி கிடையாது. தமிழ் மக்களுக்கு இலங்கைதீவில் பொருளாதார சுதந்திரமும் சமத்துவமும் இல்லையேல் சிங்கள மக்களுக்கும் சரி ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொருளாதார விருத்தி கிடையாது. இதனை சிங்களத்தின் கோட்டைக்குள் உரத்துச் சொல்ல வேண்டும்.
இப்போதுதான் சொல்வதற்கேற்ற தருணம். இந்த தருணத்தை தமிழ் மக்கள் தவறவிடக் கூடாது. எதிரி பலவீனமடைந்திருக்கின்ற போதுதான் நாம் பலமாக தாக்க வேண்டும். எதிரி பலவீனமாக இருக்கும் போதுதான் எதிரிடமிருந்து பெறக்கூடியதை பெறமுடியும். அதனை தமிழ் மக்கள் சரிவர இன்றைய நெருக்கடி காலச் சூழலில் கையாளவேண்டும். இன்றைய இலங்கையின் பொருளாதார, அரசியல் , அதிகார நெருக்கடிகளை குறுங்காலத்தில் தீர்த்துவைத்துதிட முடியாது.

இந்த பொருளாதாரப் பிரச்சினை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு நீடிக்கத்தான் போகின்றது. எனவே இந்தக் காலவரையறைக்குள் தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அறிவுப்பூர்வமான மூலோபாயத்தை வகுத்து செயற்பட வேண்டிய காலமிது. "காலம் நமக்காக ஒருபோதும் தரித்து நிற்கப் போவதில்லை" காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுதான் அறிவார்ந்த செயலாகும்.
ராஜபக்சர்களின் கையால் முடிசூட்டப்பட்ட தலைவர் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அதிகார ஸ்திறமின்மையும், அரசு தலைவர் நாடுவிட்டுநாடு ஒழித்தோடும் இலங்கை அரசியலில் அதிகார வரம்பில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஒருபெரும் தலைமைத்துவ இடைவெளியை, நெருக்கடியை சிங்கள தேசத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய நாட்டைவிட்டோடி பதவி அற்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க அவரது பொறுப்பை வகிக்கிறார். நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் கடமையாற்றும் ரணில் விக்கிரமசிங்க காய் நகர்த்தல் அரசியலில் திறமை வாய்ந்தவர்.நீண்ட வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் அனுபவம் கொண்டவர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் மிக இளவயதில் அதாவது தனது 29 வது வயதில் பதில் அமைச்சுப் பதவியை பெற்று உடனடுத்து அமைச்சர் பதவி வகித்தவ முதலாவது இளவயது அமைச்சர் என்று பெயரெடுத்தவருமாவார். இன்று இருக்கின்ற இலங்கை அரசியலில் பழுத்த கிழட்டு நரி ரணில்தான். ஆனால் அவர் ஒரு மக்கள் தலைவன் என்ற நிலையை இழந்து தோல்வியடைந்த ஒரு தலைவராகவும், ராஜபக்சர்களின் கையால் முடிசூட்டப்பட்ட தலைவராகவும் இருக்கிறார்.
விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில் நாலைந்து சிங்கங்கள் கூட்டுச் சேர்ந்த வியூகம் அமைத்து பிராணிகளை வேட்டையாடும். அவ்வாறு வேட்டையாடிய உணவை தமக்கிடையே பங்கிட்டு உண்ணும் இயல்புடையன. அவ்வாறுதான் சிங்கள ஆளும் உயர்குழாத்திடமும் அரசியல் அதிகாரம் என்று வருகின்றபோது அவர்கள் அரசியல் அதிகாரத்தை சமமாகவும் தமக்கிடையே குரோதம் இன்றியும் அமைதியாக பகிர்ந்து கொள்ளும் இயல்புடையவர்கள்.
ராஜபக்சர்களிடையே பௌத்த மகாசங்கத்தின் ஆதிக்கம்
அவ்வாறு இல்லாமல் சிலவேளை அவர்களுக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டாலும் பௌத்த மகாசங்கம் உள்ளே நுழைந்து சுமூகமாக தீர்த்துவிடும். இதுவே இலங்கை அரசியல் வரலாறு. இத்தகைய சூழ்நிலையில் மகாசங்கம் எடுக்கின்ற முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவர். அதுவே இலங்கையின் முடிந்த முடிவான தீர்வாகவும் அமையும்.

பௌத்த மாகாசங்கம் சங்க ஆணையை பிறப்பித்தால் இலங்கை அரசியலில் எந்த மாற்றங்களும் உடனே நிகழும் என்பதுதான் உண்மையாகும். இது மாத்திரமல்ல கோட்டாபய ராஜபக்சவை இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்ற குற்றங்களை இலங்கையின் சிங்கள அரசியல் தளத்திலோ அல்லது கொழும்பு கிளர்ச்சி காரார்களோ ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை.
அவர்கள் முன் வைக்கவும் மாட்டார்கள். ராஜபக்சர்களின் மீது குறிப்பிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டால் அவர்களுக்கு பின்னே இருக்கின்ற இலங்கை ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் சக்திகள் என அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும். அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிடும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுவிடும்.
இத்தகைய ஒரு சூழலை ஒருபோதும் எந்த ஒரு சிங்கள மகனும் ஏற்கப்போவதில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாறாக தமிழர் தரப்பு மேற்குறிப்பிட்ட குற்றங்களை ராஜபக்சர்கள்மீது சுமத்தி இலங்கை நீதித்துறைக்கு எடுத்துச் சென்றாலும் அதனை மிக வன்மையாகவும் கடுமையாகவும் எதிர்ப்பவர்களும் இந்தக் கிளர்ச்சிக்காரர்களாகத்தான் இருப்பார் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.
ஆனாலும் தமிழர் தரப்பு இந்த சந்தர்ப்பத்தில் தமக்குரிய வகிபாகத்தை வகித்தே ஆக வேண்டும். இலங்கையின் பொருளாதார நெருக்கடியும், மக்கள் போராட்டங்களும் சர்வதேச சூழலில் பேசு பொருளாக வருகின்ற போது தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடினால் மாத்திரமே சர்வதேச நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களுடைய பிரச்சனையும் இன்றைய பேசு பொருளாக பதியப்படும்
இலையேல் தமிழ் மக்களுடைய பிரச்சினை பின் தள்ளப்பட்டு இலங்கையில் வெறும் பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே உள்ளது என்ற தோற்றம் ஸ்தாபிக்கப்பட்டு விடும். எனவே தமிழ் மக்கள் போராடியே ஆகவேண்டும். போராடினால் தான் தமிழ் மக்களுக்கு வாழ்வு. போராடினால் தான் தமிழ் மக்களுக்கு உரிமை. போராடினால் தான் தமிழ் மக்கள் இந்த வையத்தில் வாழ முடியும். போராடாத எந்த ஒரு ஜீவனும் இந்த பூமியில் நிலைத்ததாக சரித்திரம் கிடையாது.
சர்வதேச நிதியில் நான்கில் ஒரு பகுதியை தமிழ் அதிகார சபைக்கு வழங்க வேண்டும்
எனவே தமிழ் மக்கள் புதிய உத்தியுடனும், புது வேகத்துடனும், புதிய சக்தியுடன் போராட வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு சுபிட்சமான எதிர்காலத்தைப் பெற்றுத் தரும். தமிழ்த் தரப்பு தீவடங்கலான பொருளாதரப் பிரச்சினையையும், அதற்கான கொழும்புக் கிளர்ச்சியையும் ஆதரித்துக்கொண்டு அதேவேளை இடைக்கால புதிய ஆட்சியில் தமிழ் மக்களுக்கான இடைக்கால அதிகார சபையை முன்வைத்து, கிடைக்கும் சர்வதேச நிதியில் நான்கில் ஒரு பகுதியை தமிழ் அதிகார சபைக்கு வழங்க வேண்டும் என்று கோரவேண்டும்.

இது வெளிநாடுகளையும் தமிழருக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலைக்குத் தள்ளும். சிங்களவரைச் சுடாத துப்பாக்கிகளால் தமிழரைச் சுட்டிருக்க முடியாத நிலையில் தமிழர் தரப்பு போராடத் தவறியது மிகப்பெரும் வரலாற்றுத் தவறு மட்டுமல்ல ஒரு சாதகமான நிலையைப் பயன்படுத்தத் தவறிய வரலாற்றுத் துரோகமாகும்.
தமிழ்த் தரப்பு போராடத் தவறிய நிலையில் சர்வதேச அரசியல் அர்த்தத்தில் தமிழர் பிரச்சினை பேசப்படும் பொருளாக அல்லாது கைவிடப்பட்டு உலகம் சிங்களப் பொருளாதாரப் பிரச்சினையுடன் தன்பொறுப்பை நிறுத்தி தமிழ் மக்கள் அரசியலில் கைவிடப்படும் பொருளாகிவிடுவர்.