அரசின் அரசியல் நாடகத்தில் விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள்! திரைமறைவில் நடந்த சூழ்ச்சி
சர்ச்சைகளும் இலங்கை அரசாங்கமும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என என்றோ ஓர் நாள் முகநூல் பதிவொன்றில் பார்த்த நியாபகம்.
பொசன் போயா தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் உள்ளிட்ட சிறு குற்றங்களைப் புரிந்த 93 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களோடு சேர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என ஆரம்பத்தில் தகவல் கசிந்தது என்றபோதிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதை தற்போது சிறைச்சாலை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட நால்வருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச “தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் பலர் இன்றும் சிறைகளில் உள்ளனர். வழக்கு விசாரணைகளின் பின் 35 பேரே தண்டனைப் பெற்று தொடர்ந்தும் சிறையிலிருக்கின்றதோடு அவர்கள் பெற்ற தண்டனைக் காலத்திற்கும் மேலதிகமாகவே தண்டனைக் கிடைக்கும் முன்னர் சிறையில் கழித்துவிட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிவுறுத்த வேண்டும். அல்லது விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற காலம் எனது வயதை விடவும் அதிகம். இன்றுவரை அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்க முடியாமலிருக்கின்றது.
அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். எமது அரசாங்கம் எவருக்கும் அநீதியை செய்யாது” என குறிப்பிட்டிருந்தார்.
அந்த “எவருக்கும் அநீதி” என்பதில், கடந்த காலங்களில் ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய புள்ளியாக திகழ்ந்த துமிந்த சில்வாவும் உள்ளடக்கம் என்பது இன்று நிரூபனமானது.
நாமலின் இந்த உரைக்கு, அரசாங்கத்திற்கு எதிரான தமிழ் தரப்பிலும், அரசை ஆதரவளிக்கும் தமிழ் தரப்பிலும் வரவேற்பு கிடைத்ததுடன் சிலர் நாமலுக்கு அறிவுரையும் வழங்கியிருந்தனர்.
அதன் பின்னர் நேற்றைய தினம், இன்றைய பொசொன் போயா தினத்தினை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினமும் நேற்றைய தினத்திலும் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் இலங்கை அரசியல் பரப்பில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஊடகங்களிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தன.
நேற்று முன்தினம் நாமல் ராஜபக்ச ஆற்றிய உரைக்கும் நேற்றைய பொது மன்னிப்பு அறிவிப்புக்கும் இன்றைய துமிந்தவின் விடுதலைக்கும் தொடர்பிருப்பதாக தற்போது ஒரு சந்தேகம் எழலாம்.
நாங்கள் சற்று பின்னோக்கி பார்ப்போமெனில், கடந்த காலங்களில் தமிழர் பகுதியில் அதிகமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் ஒன்று அதிக காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் என்பது.
தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது கடந்த கால நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.
வடக்கு - கிழக்கு பகுதிகளில் பாரிய அளவில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு, அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி புலம் பெயர் தேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அத்துடன், இது தொடர்பில் கதைப்பதற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இது குறித்து அடிக்கடி இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி வந்திருந்தனர்.
இதன் பலனாக அவ்வப்போது சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட இப்போது போன்று பெரும் ஆரவாரத்துடன் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு இந்த ஆரவாரம் எதற்கு என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அதையும் கடந்து, கடந்த 2018ஆம் ஆண்டு கிளிநொச்சியை சேர்ந்த ஆனந்தசுதாகரன் என்ற அரசியல் கைதியின் மனைவி இறந்ததும், மரணத்திற்கு சிறைச்சாலையில் இருந்து வந்த தனது தந்தையோடு சிறைச்சாலை வண்டியில் ஆனந்த சுதாகரனின் மகள் ஏறிச் செல்ல முற்பட்டதும் தமிழ் தரப்பினரை மாத்திரமல்லாது முழு இலங்கைக்கும் ஒரு துயர வரலாறை எடுத்துக் காட்டியது.
அதன் பின்னரான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனந்தசுதாகரனின் மகள் மற்றும் மகன் எழுதிய கடிதங்கள், சந்திப்புக்கள் என அனைத்துமே பயனற்றதாக போனதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த பின்னணியில் தற்போது அரசியல் கைதிகள் தொடர்பான வாதங்கள் அதிகரித்துள்ளமையும் அவர்கள் விடுதலை தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கப்பட்டமையும் நல்லதற்கே என்றாலும் அதிலும் ஒரு அரசியல் சூழ்ச்சி இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதையாய் அரசியல் கைதிகளின் விடயத்தை கையில் எடுத்து மறைமுகமாக ராஜபக்ச அரசின் தீவிர விசுவாசியான துமிந்த சில்வாவை விடுதலை செய்திருக்கின்றது அரசு.
பெரும்பாலும் இன்றைய தினம் அதிகாலை ஊடகங்களிலும் கூட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை முதன்மைப்படுத்தப்பட்டிருந்த அளவு துமிந்த சில்வாவின் விடுதலை பெரிதாக காட்டிக்கொள்ளப்படவில்லை.
அவரது விடுதலையும் கூட முதலில் ஊகமாக வெளியிடப்பட்டிருந்ததே தவிர சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தும் வரை தகவல் கசியவில்லை.
மேலும், 16 தமிழ் அரசியல் கைதிகளும் 93 சிறுகுற்றங்ளைப் புரிந்த கைதிகளுமே பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் கொலையாளி என முத்திரையிடப்பட்டு மரண தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சிறு சிறு உதவிகளை செய்தவர்களே இத்தனை காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து துயரப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் கொலை குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை சிறு குற்றங்களை புரிந்தவராக கருத முடியுமா?
அரசியல் கைதிகளின் விடுதலையை பெரிதாக ஊடகங்களுக்கும் மக்களுக்கும் காட்டி திரை மறைவில் அரசுக்கு சார்பான ஒருவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நான் பெரும்பான்மை இன வாக்குகளால் வெற்றிப் பெற்றிருந்தாலும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நான் ஜனாதிபதி, அனைவருக்கும் சமமான சேவையை ஆற்றுவேன் என்றும் ஒரே நாடு ஒரே சட்டம் எனவும் அறிவித்திருந்தார்.
ஆனால், ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பத்திற்கு அமைய சட்டங்கள் வளைந்து கொடுக்கும் என்பதும் அதுவும் அனைவருக்கும் சமமாக வளைந்து கொடுக்கும் என்பதையும் தற்போது ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிக்கா பிரேமசந்திர, இனிமேல் துமிந்த சில்வா விடுதலை செய்யப்படலாம் என்ற ஐயம் இருப்பதாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதை தற்போது நினைவுகூர்ந்து அன்றே கணித்தார் ஹிருணிக்கா என்று சிணிமா பாணியில் கடந்து செல்லவேண்டியதே.....