மாகாணத் தேர்தலை நடத்துமாறு அநுரவிடம் கேட்டுக்கொண்டேன்! இந்தியத் துணை ஜனாதிபதி
மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தும்படி நேற்றுக் காலையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவைத் தாம் நேரில் சந்தித்துப் பேசிய போது கேட்டுக்கொண்டதாக இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று(20.04.2026) மாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
முக்கிய சந்திப்பு
இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த்தேசிய மறுமலர்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,
"இத்தகைய உயர்மட்ட இராஜதந்திர வருகைகளின் போது, எமது வடக்கு-கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்பதே தமிழ் மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றே நியாயமானதாகவும், நின்று நிலைத்து, நீடிக்க கூடியதாகவும் இருக்கும் என்பதை தமிழர் தரப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கு ஏற்ப பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழ்த் தலைவர்களோடு இந்தியத் துணை ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார்.
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.
மேலும், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் நடைமுறையாக்கம் பற்றிய விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்தாய்வு செய்தனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் வசனம் தெரிவித்துள்ளனர்.
அது குறித்து முற்பகலில் இலங்கை ஜனாதிபதியோடு தான் நடத்திய பேச்சின் போது தான் நேரடியாக வலியுறுத்தினார் என்று இந்தியத் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், இந்தியத் துணை ஜனாதிபதியின் இந்த வலியுறுத்தலுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எந்தப் பிரதிபலிப்பையும் இலங்கை ஜனாதிபதியோ அல்லது இலங்கைத் தரப்புப் பிரதிநிதிகளோ அந்தச் சந்திப்பில் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்