சிங்கள ஆக்கிரமிப்புக்களை தடுக்க தமிழ்க்கட்சிகளுக்கு அழைப்பு: சிவஸ்ரீ கணேசலோகநாதன்(Photos)
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கம் மற்றும் நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பில் நேற்றைய தினம் (15.05.2023) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் உப்புக்கஞ்சியை மட்டுமே பாதிக்கப்பட்டோர் தமது உணவாக கடைப்பிடித்தனர்.
தமிழ் தேசியத்தில் பற்று
அதனை மீட்டிப்பாக்கும் வகையிலும் எதிர்கால சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவேண்டும் என்பதற்காகவும் இந்த நினைவேந்தலை வருடாந்தம் நாங்கள் நினைவுகூர்ந்துவருகின்றோம்.
முள்ளிவாய்க்கால் நினைவுவாரம் அனுஷ்டிக்கும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசியத்தில் பற்றுக்கொண்டவர்களுக்கு ஒரு கோரிக்கையினை கிழக்கிலங்கை இந்தக்குருமார் ஒன்றியத்தினூடாக முன்வைக்கவிரும்புகின்றோம்.
தற்போது தையிட்டி, திருகோணமலை போன்ற இடங்களில் பௌத்தமயமாக்கலை மூலாதாரமாக கொண்டு பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் தற்போது பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன.
இது போன்ற சமயங்களில் தமிழ் தேசியம் சார்ந்த அனைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது நிலப்பிரதேசத்தினை பாதுகாக்கவேண்டும்.
விட்டுக்கொடுக்க தயாரில்லை
இதேவேளை தமிழர்களின் தாயகப்பிரதேசமான வடக்கு கிழக்கை நாங்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அலுவலகத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து உப்புக்கஞ்சி காய்ச்சப்பட்டு அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருகோணமலை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

















