கிழக்கில் தமிழ்த்தேசியம் சாகடிக்கப்படாது மீண்டும் எழுச்சிகொள்ளும் வெற்றியடையும்!
தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான அரசியல் பாதை, அரசியல் பணி என்பதை முதலில் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தந்தை செல்வாவின் தீர்க தரிசனம் 1948, காலப்பகுதியில் இருந்தமையால் தான் இணைந்த வடக்கு, கிழக்கு தாயகம் தமிழ்மக்களின் பூர்வீக நிலம். அதனைக் கபளீகரம் செய்து துண்டாடக்கூடாது என்பதற்காகவே இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பர் 18ம் நாள் ஆரம்பித்து அதன் பிரதான கொள்கையாகச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் என்ற எண்ணக்கருவால் அரசியல் பணிகளை அகிம்சை போராட்ட வடிவமாக மாற்றிப் பயணித்தார்.
அந்த உன்னத கொள்கையை உதாசீனம் செய்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தொடராகச் செயல்பட்டமையால் தான் 1976 மே 14ல் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் தமிழீழ தனியரசுக் கொள்கை பிரகடனம் செய்தார், அவரின் மறைவு 1977 ஏப்ரல் 26 இடம்பெற்றது.
அவரால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான அங்கீகாரம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள 18 தொகுதி, 1977 யூன் 24ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் ஆணையை வழங்கினர், அதில் கல்குடா தொகுதி மக்கள் மட்டும் தோல்வி கண்டிருந்தது.
அந்த ஆணையால்தான் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகத் தமிழன் ஒருவன் எதிர்க்கட்சி தலைவரானார்.
அது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்தது.
அந்த மக்கள் ஆணையைப் பார்ப்பதற்கு முன்னமே தமிழ்மக்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்ற வார்த்தையை மட்டும் விட்டு விட்டு தந்தை செல்வா 1977 ஏப்ரல் 26ல் இறையடி எய்தினார்.
அதன் பின்னரான காலப்பகுதி இளைஞர்கள் 36, விடுதலை இயக்கங்களைத் தொடங்கி கரந்தடித்தாக்குதல் மூலம் ஈழ விடுதலை போராட்டத்தை ஆயுதப்போராக மாற்றினர்.
36விடுதலை இயக்கங்கள் கால ஓட்டத்தில் 30ஆக, 20ஆக, 7ஆக விடுதலை இயக்கங்கள் மாற்றமடைந்து இறுதியாக 1987 யூலை 24ம் திகதி இலங்கை அரசு தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ காந்தி இருவரும் கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் ஏழாக இருந்த விடுதலை இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி சில இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறின.
அந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்றன, சில இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடைசெய்தனர்.
1987 யூலை 24 தொடக்கம் 2009 மே 18 வரை ஏறக்குறைய 22வருடங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே இனவிடுதலைப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.
கரந்தடித்தாக்குதல் கறை மட்டும் நடத்திய விடுதலைப்புலிகள் முதன்முதலாக 1987 அக்டோபர் 10ம் திகதி முதலாம் கட்ட ஈழப்போரை இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக நடத்தினர்.
இந்த முதலாம் கட்ட போர்க்காலத்தில் தான் 1988 நவம்பர் 19ம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த முதலாவது மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது.