தமிழக கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்ட 7 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
அத்துமீறி நுழைவு
கடந்த 13ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்திய கடற்தொழிலாளர்களையும் கைது செய்திருந்தனர்.
பின்னர் குறித்த கடற்தொழிலாளர்களையும், இழுவை படகினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் அவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
விசாரணைகளின் பின்னர் கடந்த 13ஆம் அன்று நீதிபதி வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த கடற்தொழிலாளர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




