யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழிக்கு முதலிடம் - மணிவண்ணனின் அதிரடி நடவடிக்கை
யாழ்.நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையத்தில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கும் நடவடிக்கையை யாழ்.மாநகர சபை ஆரம்பித்திருக்கின்றது.
மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் பணிப்பிற்கமைய தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கி பெயர் பலகைகளை உடன் மாற்றியமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிட பலகைகள் சீரமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
அங்கு ஒவ்வொரு மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் அறிவுறுத்தலில் உள்ளூர் அச்சகம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகளை சீர்செய்ய சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்ட பலகை ஒன்று இன்று முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
அதனையடுத்து அனைத்து பலகைகளும் இன்று அகற்றப்பட்டு சீரமைத்து சில தினங்களுக்குள் மீளவும் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.