இரண்டு விடயங்களில் ஒருமித்துப் பயணிக்க தமிழரசு - சங்கு முடிவு
மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களை எப்படி நாங்கள் முகம் கொடுப்பது மற்றும் முக்கியமான விடயங்களில் இணைந்து செயற்படுவது பற்றி நீண்ட கலந்துரையாடலொன்றை நாம் நடத்தினோம். இதன்போது இரண்டு முக்கிய விடயங்களைப் பேசினோம்.
ஒருமித்த நிலைப்பாட்டை
முதலாவது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில் அதிகாரப் பகிர்வை கோரும் நாங்கள் அதனை விட்டுக் கொண்டு செல்ல முடியாது.
மிக விரைவில் மாகாணங்களுக்கு மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் கையிலே போய்ச் சேர வேண்டும்.

அதற்காக மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை நாங்கள் சேர்ந்து கொடுப்பதாகத் தீர்மானமாக எடுத்திருக்கின்றோம்.
இரு தரப்பினரும் செய்து கொண்டிருக்கின்ற விடயத்தைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம்
தமிழ் மக்களுக்கான நீதியான - நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே சேர்ந்த தரப்புகள் என்ற ரீதியிலும் பழைய சரித்திர விடயங்கள் பலவற்றை அடைந்திருக்கின்றோம்.
இது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டை நாங்கள் வெளிக்கொண்டு வருவதற்கான தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்துவதாகத் தீர்மானித்திருக்கின்றோம்" என்றார்.