பேச்சுவார்த்தைகளால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ரவி கருணாநாயக்க(Video)
இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மாற்றவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“பேச்சுவார்த்தைகளின் மூலம் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மாறாக பேச்சுவார்த்தைகள் செயல் முறைப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் 2015ல் ஏற்பட்டிருந்த பொருளாதார பிரச்சினைகளை நாம் தீர்த்தோம். மக்கள் வரிசைகளை இல்லாது செய்தோம். எனினும் தற்போது மீண்டும் அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு பின் இவை குறைக்கப்பட்டு வருகின்றன. வரிசை யுகத்தை முற்றாக இல்லாமல் செய்ய அவரால் மாத்திரமே முடியும். மேலும், விழுந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு என்னால் செய்ய முடியுமானவற்றை நான் ஒரு தனிநபராக செய்வேன்”என கூறியுள்ளார்.