தலிபான்களின் புதிய அரசாங்கமும், ஷரியா சட்டமும் !
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான போரில் ஆதிக்கம் செலுத்திய நபர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி தலிபான்களால் நேற்றைய தினம் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கமைய, ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமராக முல்லா மொஹம்மட் ஹஸ்ஸன் அகூந்த் (Mullah Mohammad Hassan Akhund) என்பவரை தலிபான் தலைமை அறிவித்துள்ளது.
ஹஸ்ஸன் அகூந்த், ஐக்கிய நாடுகள் சபையின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இடைக்கால பிரதமர் அகுந்த்ஸதா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய விதிகள் மற்றும் ஷரியா சட்டத்தை அரசு பேணுமென தெரிவித்துள்ளார்.
தேசத்தின் உயரிய நலன்களை பாதுகாத்து, அமைதி, வளம், வளர்ச்சி தழைத்தோங்க பொறுப்பில் உள்ளவர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மதம் மற்றும் நவீன அறிவியல் சூழ்நிலைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, முறைப்படி புதிய அரசு அமையும் வரை இடைக்கால அரசில் இடம்பெறுவோரை தலிபான் தலைமை அறிவித்துள்ளதாக அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிரதிப் பிரதமராக முல்லா அப்துல் கனீ பரதா, உள்விவகார அமைச்சராக சராஜுதின் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலிபான் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
புதிய அமைச்சரவையில் இதுவரை பெண்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை என பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் விடயத்தில். தலிபான்கள் தாம் முன்னர் பின்பற்றிய கடும் கொள்கைளிலிருந்து இப்போது சற்று தளர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு தலிபான்கள் அனுமதியளித்துள்ளனர். ஆனால், உடலை மூடும் வகையில் அபாயா (abaya ) ஆடை அணிந்திருக்க வேண்டும் எனவும், அத்துடன் கண்கள் தவிர்ந்த முகத்தை மறைக்கும் நிக்காப் (niqab) ஆடை அணிந்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
அத்துடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடைபெற வேண்டும் எனவும், 15 பேருக்கு குறைவான வகுப்புகளில் குறைந்தபட்சம் இரு பாலாருக்கும் இடையில் திரையொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்பின் முதல தடவையாக தனியார் பல்கலைக்கழகங்கள் கடந்த திங்கட்கிழமை முதல் இயங்க ஆரம்பித்தன. ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய நகரங்களான காபூல், கந்தகார், ஹேரத் போன்றவற்றில் உள்ள தனியார் பல்கலைக்கங்களில் மாணவர்கள், மாணவிகளுக்கு இடையில் திரைகள் அமைக்கப்படுவதாக அப்பல்கலைக்கழங்களின் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், முதல்நாளான திங்கட்கிழமை பெரும்பாலான பல்கலைக்கழங்கள் வெறிச்சோடியிருந்தன. அதேவேளை, காபூல் நகர பல்கலைக்கழகங்களில் மாணவ மாணவிகள் நேற்றும் இன்றும் பல்கலைக்கழக வகுப்புகளில் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அவ்வகுப்புகளில் மாணவ மாணவிளுக்கு இடையில் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன, ஆனால், அப்புகைப்படங்களிலுள்ள மாணவிகள் முகம் தெரியும் வகையிலேயே ஆடை அணிந்திருந்தனர்.
தலையை அவர்கள் மறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பெண்களுக்கு பெண்கள் மாத்திரம் அல்லது வயதான ஆண்களே கற்பிக்க வேண்டும் எனவும் தலிபான்களால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல்கலைக்கழகத்தில் பெண்களுக்காக தனியான வாசல் இருக்க வேண்டும், ஆண் மாணவர்களைவிட 5 நிமிடங்களுக்கு முன்னதாக மாணவிகளுக்கான வகுப்புகள் முடிவடைய வேண்டும் எனவும் எனவும் தலிபான் உத்தரவிட்டுள்ளனர். அரச பல்கலைக்கழங்கங்கள் தொடர்பில் தலிபான்கள் இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ,ஆப்கானிஸ்தான் இனிமேல் “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இராச்சியம்” என்றே அழைக்கப்படுமென தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும்,ஆப்கானிஸ்தானில் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமையை பெற்றுத் தருமாறு கோரி ஆப்கான் மக்களால் தலிபான்களுக்கு எதிராக தொடர்ந்தும் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் மீது மத ரீதியாக கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் அறிவித்திருந்தாலும், இது தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு தொடர்ந்தும் சந்தேகம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்களை அமெரிக்கா உட்பட உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக செயதிகள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
