திருகோணமலையில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சந்திக்க லக்மால் ஜயலத் முன்னிலையில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் உப்புவெளி-ஆனந்தபுரி, முதலாவது ஒழுங்கையைச் சேர்ந்த யோகா தாசன் லக்சன் (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி கப்பல் துறையில் உள்ள அவரது மனைவியின் வீட்டுக்கு வருகை தந்து தனது மனைவியின் தாய் தந்தையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் அவரது மாமனாரான அதே பகுதியைச் சேர்ந்த பெர்ணாந்து குமார் (47வயது) என்பவரை வாளால் வெட்டியுள்ளார். இதே நேரம் அவரது மாமியாரான 43 வயது உடைய முத்துமாரி என்பவர் சண்டையைத் தடுக்க சென்றுள்ளார்.
அவ்வேளையில் சந்தேக நபரான யோகதாசன் லக்சன் என்பவருடைய 6 மாத குழந்தை மாமியாரின் கையிலிருந்ததாகவும், இதன்போது மாமனாருக்கு வெட்டிய வாள்வெட்டு 6 மாத குழந்தையின் தலையில் பட்டதாகவும், இதனையடுத்து குறித்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை கைது
செய்யப்பட்டு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.