யாழில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவர் காயம் - வாள்வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் மடக்கி பிடிப்பு (Photo)
யாழ்.நவாலி பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதன்போது குறித்த வாள்வெட்டு கும்பலில் ஒருவரை வீட்டார் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருச்சபை வீதி நவாலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றினுள், இன்றையதினம் அதிகாலை 3.20 மணியளவில் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டு குழுவினர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, வீட்டிலிருந்த இளைஞனின் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை இளைஞன் தப்பித்த நிலையில் குறித்த இளைஞனின் தந்தையான நடராசா அருள் றொபின்சன் (வயது 48) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அயலவரின் உதவியுடன் வாள்வெட்டு கும்பலில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில், குறித்த நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
மடக்கிப்பிடிக்கப்பட்ட நபரை மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த
சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




