யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு சம்பவம் : மேலும் மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவு
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த வன்முறைக் கும்பல் நடாத்திய வாள்வெட்டு வன்முறைச் சம்பவமும் அதனுடன் தொடர்ச்சியாக பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகமும் குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் தெல்லிப்பழை பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புக்கமைய யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்ததுடன் மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (04) மாலை 5.30 மணியளவில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. இதில் அளவெட்டியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரொருவர் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக ஹயஸ் வானில் தப்பிச் சென்ற வன்முறை கும்பலை பொலிஸார் துரத்தி சென்ற போதும் வன்முறை கும்பல் வேகமாக சென்று மல்லாகம் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டு ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது.
இது தொடர்பிலான சிசிடிவி காணொளி வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதன்போது பொலிஸார் ஹயஸ் வான் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் வானின் ரயர் பகுதி சேதமடைந்த போதும் வன்முறை கும்பல் சுன்னாகம் ஊடாக தப்பிச் சென்றது. மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டது.
சந்தேகநபர்களின் பொருட்கள் மீட்பு
காயமடைந்தவர்களின் வாக்குமூலம், சிசிடிவி காணொளி என்பவற்றை கொண்டு பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அன்றைய தினமே வன்முறைச் சம்பவத்தின் சந்தேக நபரொருவர் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் வன்முறைக்கு பயன்படுத்தபட்ட ஹயஸ் வான் , இரண்டு வாள், முகம் மறைக்க பயன்படுத்தப்பட்ட துணி , ரீசேட், ஹயஸ் வானை உருமாற்றம் செய்யும் வகையில் வானில் இருந்து உரிக்கப்பட்ட ஸ்ரிக்கர் என்பனவும் கைப்பற்றப்பட்டது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஹயஸ் வான் கைப்பற்றப்பட்டது. கோப்பாய் - கைதடி இடையில் உள்ள மயானமொன்றில் மறைக்கப்பட்ட நிலையில் இரண்டு வாள், முகம் மறைக்க பயன்படுத்தப்பட்ட துணி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இரண்டு தரப்பினரிடையே நீண்டகாலமாக இருந்த பழிவாங்கும் எண்ணத்தின் அடிப்படையில் கொலை செய்வதற்கான முயற்சியே குறித்த வன்முறைச் சம்பவத்திற்கு பிரதான காரணம் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நால்வரும் எதிர்வரும் 19ம் திகதி வரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மூவரும் தலைமறைவாகி உள்ளதாகவும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri