காத்தான்குடி பிரதேசத்தில் கத்திக்குத்து தாக்குதல் - சந்தேகநபர் தலைமறைவு
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பாலமுனை பிரதான வீதியிலுள்ள சதாம் குறுக்கு வீதியில் இடம்பெற்றுள்ளதுடன்,பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கத்திக்குத்துக்கு இலக்கான இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இன்னுமொருவரினால் வழி மறிக்கப்பட்டு இருவருக்கிடையில் வாய்த்தகராறு இடம்பெற்று பின்னர் கத்திகுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் பாலமுனை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும்,பாலமுனை ஆர்.டி.எஸ்.வீதியைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது சம்பவ இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இக்கத்திகுத்து சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும், குறித்த சந்தேகநபரை காத்தான்குடி பொலிஸார் தேடி வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.