கிளிநொச்சியில் வாள் வெட்டு தாக்குதல் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி - அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வீட்டு உரிமையாளரின் மனைவியையும் தாக்கியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீட்டுரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இரு நபர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிணக்கு விரிவடைந்து இவ்வாறு குழுத்தாக்குதலாக உருப்பெற்றுள்ள நிலையில் குறித்த குழுவினர் வாழ்வாதார வளர்ப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமக்குப் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டுக்கு 15 பேர் அடங்கிய குழுவினர் சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.