போதைப்பொருளுடன் தீபாவளி தினத்தன்று இருவர் கைது
போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை தீபாவளி தினத்தன்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த இரு சந்தேகநபர்களை நேற்று (20) மாலை சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் கைது
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேகநபர்கள் 25 வயது மற்றும் 22 வயதுடையவர்கள் என்பதுடன் சம்மாந்துறை மலையடிக்கிராமம் 3 பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
மீட்கப்பட்ட பொருட்கள்
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 1370 மில்லிகிராம், 385 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஒரு தொகை பணம் கையடக்கத்தொலைபேசி, மோட்டார்சைக்கிள் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.




