சீன உளவு பலூனை அதிரடியாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
அமெரிக்காவிலுள்ள உள்ள முக்கிய இராணுவ தளங்களில் உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை போர் விமானங்கள் மூலம் அமெரிக்க கடல் எல்லையில் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு சிறிய வெடிப்புக்குப் பின் பலூன் கடலில் விழுவதை அமெரிக்க தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன.
இராஜதந்திர நெருக்கடி
தென் கரோலினாவின் மர்டில் கடற்கரைக்கு அருகில் ஆழம் குறைந்த 47 அடி கடலில் இந்த பலூன் விழுந்துள்ளது. இதனையடுத்து ஏழு மைல்களுக்கு (11 கிமீ) பரவியுள்ள குப்பைகளை மீட்க இராணுவம் முயற்சித்து வருகின்றது.
இவ் பலூன் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டமை ஒரு இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் இந்த 'பொறுப்பற்ற செயல்' காரணமாக இந்த வார இறுதியில் மேற்கொள்ளவிருந்த சீனாவுக்கான தமது பயணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
உளவு பார்க்கும் பலூன் இல்லை
எனினும் இது உளவு பார்க்கும் பலூன் இல்லை என்று தெரிவித்துள்ள சீனா, பொது பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்றும் தவறாக அமெரிக்க வான்பரப்பில் பிரவேசித்தது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 28 அன்று பலூன் முதலில் அமெரிக்க வான்வெளியில் நுழைந்ததாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகு கனேடிய வான்வெளிக்கு நகர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜனவரி 31 அன்று மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகவும்
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.