யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது(Photo)
500 போதை மாத்திரைகளுடன் வல்லை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி உப்பு வல்லை சந்திப்பகுதியில் நேற்று (22.01.2023) மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி அரச புலனாய்வாளர்களின் தகவலிற்கு அமைய நெல்லியடி பொலிஸ் நிலய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஒரு மாத்திரை 250 ரூபாய்
28 வயதுடைய சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஒரு மாத்திரை 250 ரூபாய் வீதம் விற்பனை செய்வதாக அரச புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யபட்டுள்ளார்.
மேலும் நெல்லியடி பொலிஸார் சந்தேகநபரை பருத்திதுறை நீதிமன்றிற்கு முற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக செய்தி,புகைப்படம்-தீபன்
கிளிநொச்சி
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 02ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த நபரை இன்றைய தினம் (23-01-2023) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே 05 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை இன்றைய தினம் (23-01-2023) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி-யது