போதைப்பொருள் கடத்த முற்பட்ட ஒருவர் கைது(Photos)
கேராளா கஞ்சாப் பொதிகளைக் கடத்த முற்பட்ட ஒருவர் இன்று(23.01.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கேரளா கஞ்சாப் பொதிகளை லொறியில் கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து லொறியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோதே கஞ்சாப் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
லுனுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
90 இலட்சம் ரூபா பெறுமதி
இதன்போது 45 கிலோ கிராம் எடைக் கொண்ட கேரளா கஞ்சாப் போதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 90 இலட்சம் ரூபாவென மதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக லொறி ஆகியவற்றை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கேரளா கஞ்சா,
ஐஸ், கடலட்டைகள், பீடி இலைகள், சமையல் மஞ்சள், கடற்குதிரைகள், களைக்கொல்லி
நாசினிகள், பாதனிகள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பலபொருட்கள் கற்பிட்டி
பகுதிக்கு கடத்தப்பட்டு வருவதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப்
பிரிவினர் தெரிவித்துள்ளனர்.