இரட்டை கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் தப்பியோட்டம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இரட்டைக்கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் குறித்த குற்றம் நிகழ்ந்த பிரதேசத்திற்கு நீதிமன்ற கட்டளையையும் மீறி பயணித்த வேளை அங்கு கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டு, தான் செலுத்தி வந்த முச்சக்கரவண்டியினையும் விட்டுத் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த வருடம் நவம்பர் மாதம் சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தையடுத்து, பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தால் சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்திற்குச் சந்தேக நபர்கள் செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற தடையுத்தரவை மீறிக் குறித்த பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டதும் தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் 21_2717 என்ற இலக்கமுடைய சந்தேக நபர் பயணித்த முச்சக்கர வண்டியினை கைப்பற்றினர்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.