உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னால் இருக்கு “பொஸ்” யார்? மனுஷ நாணயக்கார கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் வெளியிட்ட சில தகவல்கள் இன்று நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தின.
அவர்கள் இருவரும் இந்த தாக்குதலின் பின்னணியில் மௌலவி நௌபர் செயற்படவில்லை என்று வலியுறுத்தினர்.
சஹ்ரான் ஹாஷிமுடன் கலந்துரையாடிய இவர் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும், இராணுவ புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட சில அதிகாரிகள் இவரை காவல்துறையிலிருந்து விடுவித்துள்ளனர்.
எனவே இந்த தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை யாரோ மறைக்க மற்றும் விசாரணையை நாசப்படுத்த முயற்சிப்பதாக தாம் உணர்வதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பாணந்துறை மற்றும் ஜா எலையில் உள்ள பாதுகாப்பான வீடுகளில் இருந்து செயல்பட்டு வந்தனர். அந்த இரு குழுக்களும் தாக்குதல்களை நடத்துவதில் தாமதம் குறித்து விவாதித்தனர்.
தாமதத்தால் “பொஸ்” வருத்தப்படுகிறார். எனவே தாக்குதலை வேகமாக மேற்கொள்ள வேண்டும்" என்று அவர்கள் விவாதித்ததாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். எனவே யார் இந்த பொஸ் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இதேவேளை சஹ்ரானை கைது செய்வது குறித்து ஆலோசனை கோரியபோது, காவல்துறை பிரதி அதிபர் நாலக சில்வாவுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கத் தவறிவிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் போது இவை வெளிப்படுத்தப்பட்டன ஆனால் அதன் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் நாணயக்கார தெரிவித்தார்.