சுரேஷ் சாலேவிற்காக வெடித்துள்ள போராட்டம்! குவியும் அரசியல்வாதிகள் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளன.
இன்று (08) காலை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல அரசியல்வாதிகள் ஆதரவு
இந்த ஆர்ப்பாட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் ஆதரவாக கலந்துகொண்டுள்ளனர்.
சுரேஷ் சாலேவின் விடுதலையை வலியுறுத்தியும், அவரது கைது மற்றும் தடுப்புக் காவலை கண்டித்தும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது போராட்டத்தில் கலந்துக்கொண்ட சுரேஷ் சாலேவின் தாயார் உருக்கமான கோரிக்கையொன்றினையும் முன்வைத்துள்ளார்.
“எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காகவே அவரை நான் ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக அவரை பலிகொடுக்க என்னால் முடியாது” இனி எந்த தாய்மாரும் தங்களது பிள்ளைகளை இராணுவ சேவைக்காக அர்ப்பணிக்கக் கூடாது அவ்வாறு செய்தால் தன்னைப் போலவே போராட வேண்டிய நிலை ஏற்படும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சுரேஷ் சாலே
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, வைத்தியசாலை வளாகத்தில் அதிகளவான விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri