சிறீதரன் சொல்வது உண்மையா? சுமந்திரன் நாடகம் - சுரேஸ்
ஐ.நா அமர்விற்கு முன்னதாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது தற்போதைய அமர்வு முக்கியமற்றதென சொல்லிய எம்.ஏ.சுமந்திரன், பின்னர் சம்பந்தன் ஊடாக ஐ.நாவிற்கு மகஜர் அனுப்பியது எதற்காக என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் பற்றி சுட்டிக்காட்டும் இலங்கை தமிழரசு கட்சியின் ஐ.நா ஆவணம் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய அவர், பல தடவைகளாக ரெலோ ஊடாக எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்ட போதும் இழுத்தடிக்கப்பட்டதாலேயே கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள், சி.வி.விக்கினேஸ்வரன் தரப்புடன் இணைந்து மகஜரொன்றை தயாரித்த நிலவரத்தை விளக்கினார்.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்து மற்றொரு ஆவணம் அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் சி.சிறீதரன் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்பது பேரது மகஜரை தானே வடிவமைத்து ஒழுங்குபடுத்தியதாகவும் தானும் அதில் ஒப்பமிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் அதேநேரம் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்து போலியாக அம்மகஜரில் இடப்பட்டதாக கூறுகின்றார்.
இதில் ஒப்பமிட்டதாக சொன்ன சி.சிறீதரன் சொல்வது உண்மையா அல்லது அவர் போலியாக ஒப்பமிட்டதாக சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் உண்மையாவென்பது தெரியவில்லை.
இந்நிலையில் ஊடகங்களை அழைத்து மக்களை ஏமாற்றவும் உட்கட்சி மோதல்கள் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள வெறுப்பை திசைதிருப்பவுமே எம்.ஏ.சுமந்திரன் நாடகம் ஆடியதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கஜன் இராமநாதனிற்கும் எமது விடுதலைப்போராட்டத்திற்கும் தொடர்புகள் ஏதுமில்லையென்பதால் அவர் வாய்மூடியிருப்பது நல்லதென வலியுறுத்தியுள்ாளர்.
அவர் அமைதியாக தனது தொழில் முதலீடுகளையும் புதிய தொழில்களையும், வியாபாரத்தை பார்ப்பதும் பொருத்தமானதெனவும் விடுதலைப் போராட்டம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு பற்றி வாய் திறக்க அங்கஜனிற்கு அருகதை இல்லை எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தரப்புக்களின் தலையீடுகளினால் ஐ.நாவினால் அரசிற்கு சங்கடங்கள் உருவாகிவிடும் என்பதால், ஆவணங்கள் அனுப்புவதற்கு எதிராக அண்மையில் அங்கஜன் இராமநாதன் கருத்து வெளிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.