டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம்
இலங்கையில் வரலாறு காணாத இயற்கை அனர்த்தம் நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது.
ஏற்கனவே பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்ட இலங்கையைப் புயலும், வெள்ளமும் தாக்கி அதன் பொருளாதாரத்தை மேலும் அதல பாதாளத்துக்குள் கொண்டு வந்து விட்டுள்ளது.
2004 இல் ஏற்பட்ட சுனாமியால் இலங்கையின் கரையோரப் பகுதிகளே கூடுதலாகப் பாதிக்கப்பட்டன. ஆனால் தற்போதைய டித்வா புயலின் தாக்கம் முழு இலங்கையும் புரட்டி எடுத்துள்ளது.
வெள்ளத்தில் வீடுகளுக்குள் நீர் புகுந்தது மட்டுமல்ல, பாலங்கள், வீதிகள் முதலானவற்றையும் பதம் பார்த்தது. இந்த அனர்த்தத்திலிருந்து மீள புலம்பெயர் சமூகம், சர்வதேச நாடுகள் எனப்பலரும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
முப்பெரும் நாடுகளின் அரசியல் பிடிக்குள் சிக்கி
இன்றைய உலக அரசியலில் நாடுகள் ஒருவரை ஒருவர் நேரடியாக ஆளாமல், அந்நாட்டு ஆளுகையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளப் பல நுட்பமான முறைகளைப் பயன்படுத்துகின்றன.
இந்த நுட்ப முறைகள் மூலோபாய ரீதியிலான நடவடிக்கை ( Strategic influence), ஆதிக்க நகர்வு (Strategic move) என இருவகைப்படும்.

இதில் மூலோபாய நடவடிக்கை (Strategic influence) என்பது அரசியல், பொருளாதார அல்லது பாதுகாப்புத் துறைகளில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக மெதுவாகவும், நுட்பமாகவும் செய்யப்படுமொரு மேலாண்மை முறைமையாகும்.
உதாரணமாக கடன் வழங்குவது, உதவி திட்டங்கள் செய்வது, ராணுவப் பயிற்சி அல்லது பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்வதன்மூலம் அந்த நாட்டின் முடிவுகளைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது.
ஆதிக்க நகர்வு (Strategic move) என்பது ஒரு நாடு அல்லது வல்லரசு எதிர்காலத்தில் பெரும் நன்மையைப் பெறும் இலக்குடன் மேற்கொள்ளும் நீண்டகாலத் திட்டமிடல் நடவடிக்கையாகும்.
உதாரணமாக சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுகள் வாடகைக்கு எடுத்தது, அமெரிக்க இந்தோ - பசுபிக் பகுதியில் கூட்டணியமைத்தல், இந்திய - இலங்கை ஒப்பந்தம், திருகோணமலையில் எரிபொருள் ஒப்பந்தம்… அதானி குழும ஒப்பந்தம் போன்றவற்றைச் சொல்லலாம்.
புவிசார் அரசியலில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலிருப்பதனால் இது ஒரு அரசியற் காந்தம். இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற முப்பெரும் நாடுகளின் அரசியற் பிடிக்குள் சிக்கப்பட்டிருப்பதனால் இலங்கை நிலம், துறைமுகம், கடற்பகுதிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இதனால்தான் இலங்கை நிதி நெருக்கடியில் இருந்தபோது இந்தியா, சீனா போன்றவை உதவி செய்தன. கடன் வாங்கியவன் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது என்று சொல்வது போல் இலங்கையிடம் அந்நாடுகள் சொல்லும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தது. இதை இலங்கையில் அந்நாடுகளின் ஒரு நிலையான நுழைவு அல்லது தலையீடு என்றும் சொல்லலாம்.
இலங்கைக்கு அவசர உதவியைச் செய்யும் பொருட்டு
அந்த வகையில் இலங்கையில் எதிர்பாராது ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் உலக நாடுகளை மீட்புப் பணி என்ற போர்வையில் இலங்கை மீது படை எடுக்க வைத்துவிட்டது.
உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளின் அதீத ஆர்வத்தைக் குறிப்பிடலாம்.

இந்தியா அண்டை அயல்நாட்டுப் பந்தம் எனச்சொல்லி உடனடியாகத் தனது முப்படைகளையும் அனுப்பி, ஒப்பரேசன் சாகர் பந்து (operation Sagar bandhu Neighborhood first) என்ற பெயரில் மூலோபாய நோக்கின் அடிப்படை (Strategic control) முறையிலான மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர்.
இலங்கையில் நடைபெற்ற இக்கட்டான நேரத்தில் விரைவாக உதவும் அரசியல் வியூகம், முதலில் தான் நிற்கவேண்டும் என்ற அதாவது இலங்கையின் கடல், வான், தரை ஆகியவற்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிற நாடுகள் உதவுவதற்கு முன் உதவி செய்து இந்துமாகடல் மீது தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயன்றது.
இதை ஆங்கிலத்தில் Strategic Move என்பர். இது ஒருவகையில் மூலோபாய ரீதியான செல்வாக்கு வலயத்திற்குள் இலங்கையைக் கொண்டுவருவது (strategic influence) ஆகும்.
இதில் பாகிஸ்தான் இலங்கைக்கு அவசர உதவியைச் செய்யும் பொருட்டு முன்வந்த போதும் இந்தியா தனது வான் பரப்பினூடாக பாகிஸ்தான் வான்படையை இலங்கைக்குள் வரப் பல மணி நேரம் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து இவற்றைப் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு இந்தியா உதயகிரி, ஐஎன்எஸ் விக்கிராந். சுகன்யா ஆகிய விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்பிய தோடு கேரள ஹிந்தான் விமான நிலையத்திலிருந்து IL17, மற்றும் C-130J ஆகிய விமானங்கள் மூலம் அவசர உதவிகள். மோப்ப நாய்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றைக் கொண்டுவந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அப்பகுதியிலிருந்து மீட்டல். வெள்ளத்தால் சிதைந்து போன பாலங்களைப் புதுப்பித்தல் போன்ற பணிகளைச் செய்தனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்திய படைகள் 1987 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்ததன் பின்னர் தற்போது டித்வா (28.11.25) புயல் அனர்த்தமூலம் இரண்டாவது தடவையாக அதிகார பூர்வமாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
பாகிஸ்தானும் தன் பணிக்கு மனித நேய மீட்பு பணிகளை இலங்கையில் செய்கிறது.
பதிலுக்கு அமெரிக்காவும் தனது அமெரிக்க இந்தோ‑பசிபிக் இராணுவ கட்டளைத் தலைமையகத்திலிருந்து (United States. Indo -Pacific Command) அல்லது (USINDOPACOM , INDOPACOM) அதன் கட்டளைத் தளபதி Admiral Samuel J. Paparo விசேட கட்டளையின் பேரில் 36வது (36th Wing) சிறப்புப் படைப்பிரிவின் தளபதியும். அண்டசன் வான்படையின் ஒருங்கிணைப்புத் தளபதியுமான கேணல் சாள்ஸ் டி.டன் கூலேயின் (Colonel Charles D. “Dan” Cooley) பணிப்பின் கீழ் 60 அமெரிக்க இராணுவத்தினர் யப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மைக்ரோனீசியாவின் பெரிய தீவான குவாம் தீவின் வடபகுதியிலுள்ள யிகோ பகுதியிலிருந்து லொக்கீட் மாட்டீன் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு C-130J super Hercules இராணுவ சரக்கு விமானங்கள் humanitarian assistance team என்ற பெயரில் 36 ஆவது படைப்பிரிவினர் ஒரு கோணல் தலைமையில் 60 பேருடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 07.12.25 வந்திறங்கியது.
பின்னர் அது எட்டாம் திகதி பலாலி சர்வதேச விமானத்தளத்தில் வந்திறங்கி நேரடியாக மனிதாபிமான உதவிகளைச் செய்தது. இதுவே முதற்தடவையாகும். பின்னர் அது அனுராதபுரம் விமானத்தளம், திருகோணமலை சீனன்குடா விமானத்தளம், அம்பாந்தோட்டை ராஜபக்ச விமானநிலையம் ஆகியவற்றிற்கும் பறப்புக்களை மேற்கொண்டு மனிதாபிமான உதவிகளைச் செய்தது.
இந்தியாவின் பாதுகாப்பு வளையத்திற்குள்
அத்துடன் அமெரிக்கத் துணைச் செயலர் அலிசன் கூக்கர் இலங்கையில் வந்திறங்கியதையும் கவனத்திற் கொள்ளத்தக்கது.
இதைத்தொடர்ந்து இந்திய , சீன உயர்மட்டத்தலைவர்களின் வருகையை வெகுவிரைவில் இலங்கையில் எதிர்பார்க்கலாம்.

இந்த C-130J super Hercules விமானத்தின் சிறப்பியல்பு என்னவென்றால் 1400 மீற்றர்கள் நீளமான ஓடுபாதையில் தரை இறங்கி, மேலழும்பும் சிறப்பியல்பு கொண்டது.
பலாலி விமானத்தளத்தின் ஓடுபாதையின் நீளம் 3500 மீற்றர்களாகும். இது இலங்கையின் இரண்டாவது பெரிய விமான ஓடுபாதையாகும்.
கட்டுநாயக்கா (3995 மீ) . இந்தியாவின் "பாதுகாப்பு வளையத்திற்குள்" (Security Umbrella) இலங்கை இருப்பதாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் நேரடியாகப் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியதானது, பிராந்திய அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உணர்த்தியது.
அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தில் பலாலியில் தரையிறங்கியதானது, "இலங்கையின் எந்தப் பாகத்திலும் எங்களால் இயங்க முடியும்" என்ற செய்தியையும், எந்த நேரத்திலும் வட இலங்கைக்குத் தேவையான உதவிகளையோ, படைகளையோ எங்களால் தரையிறங்கி வழங்க முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறது.
இந்தியா தன்னைப் பிராந்தியத்தின் முதற்பாதுகாவலன் (First Responder in the Region) என்று அழைத்துக் கொள்கிறது. ஆனால் அமெரிக்க இராணுவம் நேரடியாக யாழ்ப்பாணத்தில் நிவாரணப் பொருட்களுடன் விமானத்தைத் இறக்கியதன் மூலம், "இந்தியா மட்டுமல்ல, நாங்களும் இலங்கையின் (குறிப்பாகத் தமிழர்களின்) ஆபத்துக்கால நண்பன்" என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
இது இந்தியாவின் தனித்துவமான செல்வாக்கை (Exclusive Influence) உடைக்கும் ஒரு மென்மையான இராஜதந்திர நகர்வாகும்.
இலங்கையின் தெற்கே சீனா இருந்தால் நாம் வடக்கே யாழ்ப்பாணத்தில் எந்த நேரத்திலும் தரையிறங்கியிருப்போம் என்ற செய்தியும் சீனாவுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
பலாலியில் அமெரிக்க விமானம் தரையிறங்கிய நிகழ்வின் மூலம் இந்தியாவுக்குச் சொல்லும் செய்தி இதுதான் இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கவசம் (Security Shield) உடைக்கப்பட்டுவிட்டது. இனி இலங்கை என்பது இந்தியாவின் கொல்லைப்புறம் மட்டுமல்ல; அது வல்லரசுகள் நேரடியாக மோதும் ஒரு பொதுக்களம் (Open Arena).
இதில் அமெரிக்கா ஒரு 'நம்பிக்கைக்குரிய பங்காளியாக' (Trusted Partner) வடக்கிலும் தனது காலடித் தடத்தை அழுத்தமாகப் பதித்துவிட்டது.
இலங்கையின் அரசியலிலும், வளர்ச்சியிலும் அமெரிக்கா ஒரு உண்மையான நண்பனாக ஆழமாக ஊடுருவியுள்ளதென்பதை பலாலியில் தரையிறங்கியதனூடு தெளிவுபடுத்த முற்பட்டிருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு பலாலி விமான தளம்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் (Indo-Pacific Region) இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் காரணமாக, கடற் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இலங்கைக் கடற்படைக்குக் கப்பல்கள் வழங்குதல் மற்றும் பயிற்சிகள் அளித்தல் மூலமும், தனது பாதுகாப்புக் கூட்டாண்மையை உறுதி செய்துள்ளது.
இந்தியா இலங்கை மீது ஒரு பெருங்கடல் செல்வாக்கை செலுத்தியதும், ரஷ்ய அதிபர் புடினுக்கு வரவேற்பை வழங்கியதும், அமெரிக்கா கடந்த காலங்களில் இலங்கையில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களை மனதில் வைத்து இந்தியாவின் நடவடிக்கைக்குப் பதில் நடவெடிக்கையாக அமெரிக்கா பார்ப்பதுடன் “We can operate swiftly in this region when needed என்ற செய்தியும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து 16 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம், இலங்கையின் வடபகுதிப்பாதுகாப்பு அரசியலிலும், சர்வதேசரீதியான போட்டியிலும் மிக முக்கியமான இடமாகத் திகழ்கிறது.
பலாலி விமான நிலையத்தின் வரலாற்றைப் பார்த்தால் இந்தியப் பெருங்கடல் வழியாக ஜப்பான் மற்றும் ஜேர்மன் கடற்படைகளின் நகர்வுகளைக் கண்காணிக்கவும், பிரித்தானியா இராணுவ விமானம மூலம் இந்தியாவின் கடற்பிராந்தியங்களைக் கண்காணிக்கவும். இந்தியாவுக்கு இலகுவாகப் பயணிக்கவும், வடபகுதியே சிறந்தது எனக்கருதி அங்கு இடம் பார்த்து பலாலியைத் தெரிவு செய்து அங்கு பிரித்தானிகளால் 1942 இல் அமைக்கப்பட்டதே இந்த விமான நிலையமாகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர்கள் இந்த விமான நிலையத்தைக் கைப்பற்றும் திட்டமிருந்ததாகச் சொல்லப்பட்டது. காரணம் இவ் விமான நிலையத்தைக் கைப்பற்றினால் இந்தியாவிலிருக்கும் பிரித்தானியர்களையும், இலங்கையிலுள்ள பிரித்தானியர்ளையும் கட்டுப்படுத்தும் நோக்கம் இருந்தது.
ஏனோ இத்திட்டத்தை இறுதியில் கைவிட்டு திருகோணமலை, கொழும்பு ஆகிய விமான நிலையங்கள் மீது ஜப்பானியர்களால் குண்டு மட்டும் போடப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்த தளம் இலங்கை வான்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1947 டிசம்பர் 10 ஆம் திகதி எயார் சிலோன் நிறுவனம் முதன் முதலாக பலாலியிலிருந்து இந்தியாவுக்கான (சென்னை, திருச்சி) பயணிகள் சேவையை ஆரம்பித்தது.
அது 1976இல் இங்கு வான் படைப்பிரிவு உருவாக்கப்பட்டு 1980இல் இலங்கையின் அதிகார பூர்வ வான்படைத் தளமாக பலாலி விமானநிலையம் மாறியது.
1978 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக பலாலி சென்னை விமானசேவையும் இடைநிறுத்தப்பட்டது. 1987களின் பின் இந்திய ராணுவம் விடுதலைப் புலிகளின் மீதான தாக்குதலுக்கு இலகுவாக தமிழகத்திலிருந்து ராணுவத் தளபாடங்களை எடுத்து வர இந்தவிமானத்தளம் இந்திய ராணுவத்திற்கு உதவியது.
வடக்கிலுள்ள அனைத்து இராணுவப் படைகளுக்கான மைய இணைப்பு மற்றும் விமான போக்குவரத்து மையமாக இந்தப் பலாலி விமானத்தளம் விளங்கியது.
அமெரிக்கா - இந்தியா - சீனா போட்டி போடும் இடங்களாக
இந்திய ராணுவம் தமிழீழ மண்ணிலிருந்து வெளியேறியபின் இப்பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அத்துடன் இந்த பலாலி விமானத்தளத்திலிருந்து ஏவப்பட்ட செல்களாலும், குண்டுகளாலும் பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களைக் காவுகொண்ட கறை படிந்த வரலாறும் இந்த பலாலி விமான நிலையத்திற்குண்டு.

1990களின் பின்னர் இந்த பலாலி விமானத்தளத்தில் லயன் எயார், மொனரா எயார் போன்ற விமானங்கள் ராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டன.
2002 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
2013இல் இது மீண்டும் விமானசேவை புதுப்பிக்கப்பட்டது. பின் 2015 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டு 17.10. 2019 ஆம் ஆண்டு பலாலி சர்வதேச விமான நிலையமாக மாறியது.
இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அலெயின்ஸ் எயார் பலாலி - சென்னை சேவையை ஆரம்பித்தது. இது இடையிடையே நின்றாலும் இன்றுவரை இயங்குகிறது.
இனி இந்தப் பலாலி விமானத்தளத்தின் முக்கியத்துவத்தை நோக்கின் இந்தியப் பெருங்கடலின் நடுவில் உள்ளதோடு, இந்தியாவின் தெற்குக் கரைக்கு மிக அருகிலுள்ளது.
இதனால் உலக வர்த்தகத்தின் முக்கிய கடற்பாதைகளைக் கண்காணிக்கவும், கடற்படைக்கு வேண்டிய உடனடி உதவிகளை வழங்கக்கூடிய தளமாகவுமுள்ளது.
இதனால்தான் இந்தியா இதையொரு buffer zone ஆக எப்படியும் வைத்திருக்க விரும்புகிறது. அதே போல் வட இலங்கையை ஒரு பாதுகாப்பு வரம்பாக இந்தியா நினைக்கிறது.
அமெரிக்கா இந்தோ - பசிபிக் குறிக்கோளாக சீனாவை கட்டுப்படுத்தும் Regional security overlay ஆகவும் பார்க்கிறது. சீனா இந்துமாகடல் வழியாக வர்த்தகம் செய்வதற்கும், இந்தியாவைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த பலாலி விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறது.
யாழ்ப்பாணம் புவியியல் ரீதியாக உலகப் பொதுமையப் பகுதியாகக் (Global commons) கருதப்படுகிறது. தமிழீழப் பகுதிகளான திருகோணமலைத் துறைமுகம். பலாலி விமானத்தளம், யாழ்ப்பாணக் கடல் வழி ஆகிய ஏற்றுமதி, இறக்குமதிப் பாதைகளைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் (தென்னிலங்கையைவிட) மிகத் தரமான இடங்களாகக் கருதப்படுவதனால் அமெரிக்கா - இந்தியா - சீனா போட்டி போடும் இடங்களாகப் பலாலி மாறியுள்ளது.
இலங்கையுடன் இந்தியா, அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் பார்த்தால் இலகுவாக விளங்கலாம். இரண்டு நாடுகளுக்கும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்ற குறிக்கோளுடன் ஒப்பந்தங்களை செய்துகொண்டன.
இந்தியா - பிராந்தியப் பாதுகாப்பு & இணைப்பு (Regional Security & Connectivity), இலங்கையைத் தன் பொருளாதாரத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தைச் செய்ய அமெரிக்காவோ - பூகோள அரசியல் ஆதிக்கம் (Geopolitical Dominance), இந்து - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை முடக்குதல் என்னும் பிரதான குறிக்கோளுடன் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்தது.
இலங்கை பாதுகாப்பு அரண்
புவியியல் அணுகுமுறை மூலம் இந்த ஒப்பந்தங்களை நோக்கில் (Geographical Approach) இந்தியாவுக்கு இலங்கை ஒரு அண்டைநாடு, பாதுகாப்பு அரண். இலங்கையில் என்ன நடந்தாலும் அது இந்தியாவைப் பாதிக்கும்.
எனவே, இந்தியாவின் ஒப்பந்தங்கள் "நீண்ட காலப் பிணைப்பை" (Long-term Integration) உருவாக்கும் என நம்பி மேற்கொள்ளப்பட்டன.
உதாரணம்: திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தம் (2003)(50 ஆண்டுகள்), தரைவழிப்பாலம் அமைக்கும் திட்டம்.எரிபொருள் குழாய், பாலம், மின்சாரம் மூலம் இணைத்தல். ஆனால் அமெரிக்காவுக்கு இலங்கை ஒரு "ராணுவத் தங்குமிடம்" (Strategic Outpost). தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் ஒரு மையம். உதாரணம்: ACSA ஒப்பந்தம் (எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம்).

மேலும் இந்தியாவின் ஒப்பந்தங்களால் பெரும்பாலும் ஊழல் மற்றும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக அதானி குழுமத்தால் மன்னாரில் உருவாக்கப்பட்ட காற்றாலைத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிக விலை விதித்தல். அமெரிக்காவின் ஒப்பந்தங்கள் இறைமை" (Sovereignty) சார்ந்தவை. உதாரணம்: SOFA ஒப்பந்தம். இதனால், அமெரிக்க வீரர்கள் இலங்கையில் குற்றம் செய்தாலும் அவர்களைக் கைது செய்ய முடியாது.
இது இந்தியாவுக்கு இலங்கையில் இல்லாத ஒரு அதிகாரமாகும். விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்டிக்கும் நோக்கில் 2007 மார்ச் மாதம் அமெரிக்காவுடன் - கோட்டாபய ராஜபக்ச செய்த ACSA ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் (Floating Armories) கடலில் எங்கு நகர்கின்றன என்ற துல்லியமான உளவுத் தகவல்களை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியதுடன் அவற்றை மூழ்கடிக்கவும் உதவின.
இது விடுதலைப் புலிகளின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாகின. இதைவிட எந்த ஒப்பந்தத்தையும் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இலங்கையுடன் செய்திருக்கவில்லை.
ஆனால் இந்தியாவோ இலங்கை - இந்திய ஒப்பந்தம்(1987), திருகோணமலை எண்ணைதாங்கி ஒப்பந்தம் ( 2003) ஆகியன செய்யப்பட்டன.
2009 தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு நடாத்திய கொடிய யுத்தத்தை தனது ஒப்பந்தங்களின் (இலங்கை - இந்திய) மூலம் தடுத்திருக்க முடியும். மாறாக இலங்கை அரசிற்கு துணை நின்று விடுதலைப் புலிகளை அழித்ததன் விளைவு இன்று சீனாவை தென்னாசியாவுக்குள் குறிப்பாக இலங்கைக்குள் காலூன்ற வைத்தது.
மேலும் 2011-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இனி அமெரிக்கா மத்தியக் கிழக்குப் போர்களில் (ஈராக், ஆப்கானிஸ்தான்) இருந்து விலகி, முழுமையாக ஆசியாவை (சீனாவை) நோக்கித் திரும்பும்" என்று அறிவித்து இதற்கு "Pivot to Asia" என்றும் பெயரிட்டார்.
பின்னர் 2011 டிசம்பரில் "ஆசிய-பசிபிக்" (Asia-Pacific) என்ற பழைய சொல்லை மாற்றி "இந்தோ-பசுபிக்" (Indo-Pacific) என்ற புதிய அரசியல் வார்த்தையாக்கி இன்று இந்தோ - பசுபிக் பிராந்தியம்" (Indo-Pacific Region) என அழைக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் பொருளாதார நுழைவாயில்
விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னான ஆசியாவில் அதிகரித்த சீனாவின் ஆதிக்கத்தை முடக்க, அமெரிக்கா இந்தியாவை முன்னிறுத்தி உருவாக்கிய ஒரு புதிய அரசியல் வரைபடமே இந்தோ - பசுபிக் ஆகும்.
விடுதலைப் புலிகளின் இராணுவ அழிவின் பின் தெற்காசிய களநிலவரம் மாறியது. அங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததால், அதை முறியடிக்க இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கையுடன் பல புதிய ஒப்பந்தங்களைக் கொண்டு வந்தன.

இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாடுகளின் ஒப்பந்தங்களில் இந்தியா இலங்கையைத் தன்னுடன் "இணைத்துக்கொள்ளவும், அமெரிக்கா இலங்கையை ஒரு "தளமாகப் பயன்படுத்த" (Utilize) முயற்சிக்கிறது. இதில் இலங்கையானது , இந்தியாவின் பொருளாதார உதவிகளையும், அமெரிக்காவின் அரசியல் பாதுகாப்பையும் (IMF ஆதரவுக்காக) பெற்றுக்கொண்டு, இருவரையும் சமன் செய்ய (Balancing Act) முயற்சிக்கிறது.
பலாலி விமான நிலையத்தின் எதிர்கால முக்கியத்துவத்தை வெறும் ஒரு பயணிகள் விமான நிலையமாக மட்டும் பார்க்க முடியாது. இது தெற்காசியாவின் "புவிசார் அரசியல் சதுரங்கத்தில்" (Geopolitical Chessboard) ஒரு மிக முக்கியமான காயாக மாறி வருகிறது.
இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் சீனாவைக் கண்காணிக்க அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் (Quad) பயன்படுத்தக்கூடிய ஒரு தள மையமாக (Logistics Hub) பலாலி மாறக்கூடும்.
பலாலி விமான நிலையம் தமிழ் மக்களின் பொருளாதார நுழைவாயில் (Economic Gateway for Tamils) கொழும்பை நம்பியிருக்காமல், வட மாகாணம் தனித்து இயங்கப் பலாலி ஒரு உயிர்நாடி.
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் தேவை "இலங்கையின் அமைவிடமே" தவிர ஈழத்தமிழர்களின் விடுதலையல்ல. ஒருவேளை தமிழீழம் உருவானால் அது சிறிய நாடாக இருப்பதால் சீனாவின் ஆதிக்கத்திற்குள் எளிதாக விழுந்துவிடும் என்று வல்லரசுகள் கூறத் தொடங்கும்.
தமிழீழம் என்ற "தனிநாடு" கிடைக்காவிட்டாலும், பலாலி விமான நிலையம் தமிழர்களுக்கு ஒரு "நாட்டிற்கு இணையான கட்டமைப்பை" (De-facto State Structure) உருவாக்க உதவும். பலாலியில் எதிர்காலத்தில் இந்திய மற்றும் அமெரிக்க விமானங்கள் வந்து செல்வது அதிகரித்தால், யாழ்ப்பாணம் ஒரு சர்வதேசக் கவனத்திற்குரிய இடமாக மாறும்.
இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகும். முன்பு போல இலங்கை இராணுவம் வடக்கில் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்ய முடியாது.
ஏனெனில், வல்லரசுகளின் கண்கள் அங்கே இருக்கும். அத்துடன் ஒருவேளை இந்தியா தனது பாதுகாப்பிற்காகப் பலாலியைச் சார்ந்திருக்கும் போது, அங்குள்ள ஈழத்தமிழர்கள் தனக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க இந்தியா இனி விரும்பும்.
எனவே ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்சம் 13வது திருத்தச் சட்டம் அல்லது சமஸ்டித்தீர்வு முறையை நிறைவேற்றி வைக்க இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri