யாழில் 20 நாட்களில் 16 இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெட்ரோல் 16 இலட்சத்து 10 ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இக்கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும்,மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும், சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 95 அக்கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை. அதேவேளை 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெணெய் விநியோகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன் பெட்ரோல் கடந்த 14ஆம் திகதி அதிக பட்சமாக ஒரே நாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் , 20ஆம் திகதியும் ஒரு இலட்சத்து 65 லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
எரிவாயு சிலிண்டர்கள் மிக சொற்பமான அளவே தற்போது கிடைக்கின்ற நிலையில், எதிர்காலத்தில் பங்கீட்டு அட்டை முறை மூலம் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழே அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த புதிய நடைமுறை பற்றிய கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது. சில நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டியுள்ளது.
இந்தமுறை இன்று மாலை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இறுதி செய்யப்பட்டு இனிமேல் இந்த நடைமுறைக்கு அமையவே யாழ்ப்பாணத்தில் எரிவாயு விநியோகம் இடம்பெறும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நேற்று மற்றும் இன்றையதினம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின் போது தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் இடம்பெற்று இருந்தமையை அறிய முடிந்தது.
எரிவாயு விநியோகத்தில் சில முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் எங்களுக்கு முறையிட்டுள்ளனர்.
ஆகவே இவற்றை தவிர்க்கும் வகையில் பங்கீட்டு அட்டை நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி அந்தந்த பிரதேச முகவர்கள் ஊடாகவே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளோம்.
பொதுமக்கள் வதந்திகளை நம்பி ஏமாறாமலும் அதிகப்பணம் கொடுக்காமலும் முறையான நடைமுறைக்கு அமையப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் வருமானம் குறைந்த மக்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்ற தொகையை விட மேலதிகமான தொகையைச் சேர்த்து தலா 5,000 ரூபாய் வழங்குவதற்குத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 78,442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும் 27,978 வறிய குடும்பங்களுமான மொத்தமாக 106420 குடும்பங்கள் அந்த நன்மையைப் பெறும்.
இதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில் அந்த நிதி கிடைத்தவுடன் மே மற்றும் யூன் மாதங்களில் அந்த கொடுப்பனவு கிடைக்கும்.
பால்மாவை பொறுத்தவரையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
இதனை விட இந்திய அரசினால் கடற்தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கைக்கிணங்க 15,000 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
அது அது மிக விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டுக் குறிப்பாக அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, பகுதி கடற்தொழிலாளர்களுக்கும் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும்.
இது கடற்தொழில் சங்கங்கள், கடற்றொழில் திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும். சுமார் 705 கடற்தொழிலாளர்கள் இந்த நன்மையைப் பெறவுள்ளனர்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.