உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் குறித்து யதார்தத்தை புரிந்துக்கொண்டுள்ள கத்தோலிக்க சமூகம்
தந்தை செல்வாவுக்கு பின்னர் தமிழ் அரசியலில் உருவான வன்முறை கலாசாரத்தின் விளைவுகளில் ஒன்றாக, உள்ளார்ந்த ரீதியாக முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சகோதர படுகொலைகளை தமிழ் சமூகத்தின் ஆயுத குழுக்கள் மேற்கொண்டன.
அதேபோன்று ஆன்மீக அடிப்படையில் முஸ்லிம்களுக்கு உள்ளேயும் ஒரு சில முரண்பாடுகள் வன்முறையின் வெளிப்பாடாக வந்தபோது அவற்றைச் சாதாரணமான சலனங்கள் என்று நம்பினாலும், அதனை மிக லாவகமாக இந்தப் பேரினவாதம் பயன்படுத்திக் கொண்டது என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் 21 வது நினைவு நாள் நிகழ்வில் ஹக்கீம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
பேரினவாதம் தமிழர்களுக்கிடையில் இடம்பெற்ற சகோதர படுகொலைகளைப் பயன்படுத்தி "கோடரிக் காம்பு"களையும் பாவித்து எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதேபோன்று, தமக்கும் நடைபெற்று விடுமோ என இன்று முஸ்லிம் சமூகத்துக்கிடையிலும் மீண்டும் தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் குறித்து இன்று கத்தோலிக்க சமூகம் யதார்த்தத்தைப் புரிந்திருக்கின்றது. பேராயர் உட்பட அந்தச் சமூகம் மிகத் தெளிவாக அதன் பின்னணியில் இடம்பெற்றுள்ள சூழ்ச்சி, சூட்சுமம் என்பன பற்றி வெளிப்படையாகப் பேசத் தலைப்பட்டிருக்கின்றது.
போதாக் குறைக்கு ஆட்சியாளர்கள் மறைக்க நினைப்பதற்கு மேலும் வலுச் சேர்க்கின்ற வகையில், காவியுடை தரித்த, வழமையாகவே வலிந்துவந்து வம்புக்கிழுக்கின்ற இன்னுமொரு "பிரபலம்" மீண்டும் பேசத் தொடங்கியிருக்கின்றார்.
மிக விரைவில் இன்னுமொரு தாக்குதல் நடைபெறப் போகின்றது என்றும், முஸ்லிம் தீவிரவாதிகள் வந்து அதைச் செய்ய போகின்றார்கள் என்றும் அந்தப் "பிரபலம்"ஆரூடம் கூறியிருக்கின்றார்.
இந்த ஆரூடத்திற்குப் பின்னால் இருக்கின்ற மிகப் பெரிய திட்டமிடலை மிகச் சரியாக அடையாளம் கண்டு , பேராசிரியர் ராஜன் ஹூல் "EASTER SUNDAY ATTACK AND DEEP STATE " என ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதி இருக்கின்றார். அது ஒரு முக்கியமான நூல் அதனை அனைவரும் வாசிக்க வேண்டும். அதில் தெளிவாக பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.
எனவே, மிக விரைவில் மீண்டுமொரு கலவரத்திற்கு வழிகோலுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இன்றைய பொருளாதார சிக்கல்களிலும் இந்த மோசமான சுகாதார சூழலிலும் வேறு வழி தெரியாமல் மீண்டுமொரு முறை முஸ்லிம்களை வன்முறையாளர்களாக எடுத்துக் காட்டி நாடகமொன்றை அரங்கேற்றுவதற்கு தயாராகி வருகின்றதை போன்ற அச்சம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கின்றது.
இதேவேளை, இஸ்லாமியர்களின் பாரம்பரிய சட்டங்களான விவாக மற்றும் விவாகரத்து சட்டம், தனியார் சட்டங்கள் போன்றவற்றில் இஸ்லாத்தின் அடிப்படை சட்ட வரையறைகளைப் பேணி ,அவற்றின் நடைமுறைகளில் சேர்க்க வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி சமயத் தலைமைகளுடனும், துறைசார் சட்ட. வல்லுனர்களுடனும், சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடி உடன்பாடு கண்ட விடயங்கள் உள்ளன .
இந்த சட்டங்களில் தங்களுக்கு வேண்டிய விதத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு மிக மோசமான அழுத்தத்தை தற்போதைய நீதியமைச்சருக்கு மேல் செலுத்திக் கொண்டிருக்கின்ற தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்பர்களை முஸ்லீம் சமூகம் வென்றாக வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்.
தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகியோரை நினைவுபடுத்தி பார்க்கின்ற போது, இந்த இரண்டு ஆளுமைகளும் பொதுவான சில தன்மைகளைக் கொண்டிருந்தன.
ஆரம்பத்தில் தந்தை செல்வாவுடைய காலத்தில் வன்முறை அரசியல் இல்லாமல் அஹிம்சை அரசியலை அடியொட்டிச் செய்துவந்த அரசியல், ஈற்றிலே வன்முறையின் பால் சென்ற பின்னர் சகோதர தமிழ் பேசும் சமூகங்கள் இரண்டும் அர்த்தமற்று அதற்குள் அள்ளுப்பட்டுக் கொண்ட போது ஏற்பட்ட அவலங்களை அனைவரும் அறிவார்கள். மீண்டுமொரு முறை இந்த இரண்டு சமூகங்களும் ஒன்றித்து பயணிக்கின்ற காலம் நெருங்கி வருகின்றன.
ஆனால் இதைப் பற்றி பொதுவெளியில் பேசுவதை சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்தாலும் கூட , தன்னுடைய உள்ளுணர்வு இன்று பரவலாக தமிழ் , முஸ்லிம் மக்களுக்கிடையில் பிராந்திய ரீதியில் இருக்கின்ற உள்ளார்ந்த முரண்பாடுகளை அடிக்கடி தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கக் கூடாது எனக் கூறுவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பரஸ்பரம் கலந்துரையாடி, இணக்கப்பாட்டிற்கு வந்து, அவற்றிலிருந்து சுமுகமான முறையில் விடுபட்டு, அதற்கப்பால் சென்று தமிழ், முஸ்லீம் என்ற இரண்டு சமூகங்களையும் அடித்து, நொறுக்கி, நாசமாக்கி அதற்கு மேலால் பயணிக்க விழைகின்ற மிக மோசமான மேலாதிக்க அணுகுமுறை தற்போது தோற்றமளிக்கிறது.
எனவே இதனைப் பற்றி இரண்டு சமூகங்களும் ஒன்றாக இருந்து சிந்திக்க வேண்டிய தருணம் வந்திருக்கின்றது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.