தமிழர்களை அலரிமாளிகைக்குள் அடகு வைத்த சுமந்திரன்! டக்ளஸ் குற்றச்சாட்டு
கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும்,பொய்யை உண்மையாகவும் புரட்டிப் புரட்டிப் போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில்,கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கடற்றொழில் அமைச்சரின் கருத்து பொறுப்பற்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் விபத்துக்குக் காரணமாகப் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என்று கருதப்படுகின்ற கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு உட்பட்ட நாட்டைச் சூழவுள்ள பாதிப்புக்கள் அற்ற கடல் பிரதேசங்களிலும் ஆழ்கடல் பிரதேசத்திலும் பிடிக்கப்படுகின்ற மீன்களே கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச சந்தைகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களிலும் சந்தேகத்துக்கிடமான பதார்த்தங்கள் கலந்து இருக்கின்றதா என்பது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியிலேயே கடலுணவுகளை உண்பதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இவை தொடர்பில் எந்தவிதமான பிரஞ்ஜையும் இன்றி, அரசுக்கும் எனக்கும் எதிரான கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவல் என்று நினைத்து உரலை இடித்திருக்கின்றார்.
அதாவது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்ட கடல் பிரதேசங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் கடலுணவு உட்கொள்வதை மக்கள் தவிர்ப்பார்களாயின், வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கரிசனைபட்டார் எனத் தெரியவில்லை.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், சுயநலன்களுக்காகவும் வடக்கு மாகாண சபை ஆட்சியை வீணாக்கியவர்கள், கிழக்கு மாகாண சபையை தாரைவார்த்துக் கொடுத்தவர்கள், ரணில் - மைத்திரி ஆட்சியில் கிடைத்த வாய்ப்பை அலரிமாளிகைக்குள் அடகு வைத்தவர்கள் கடற்றொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையோடு செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறானவர்களின் கடந்த கால போலித் தேசிய செயற்பாடுகளும், தீர்க்கதரிசனமற்ற
குறுகிய சிந்தனைகளும், அரசியல் அனுபவமற்ற சிறுபிள்ளைதனங்களையும் அதிகாரங்களைப்
பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் என்ற கொள்கைகள் அற்ற வியாபார
சிறுமைகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்பதை
எதிர்காலத்திலாவது சுமந்திரன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.