இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனிக்கு முக்கிய பங்கை வழங்காமை தொடர்பில் சுமந்திரன் கேள்வி
கோவிட் வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேக்கு முக்கிய பங்கொன்றை வழங்கத் தவறியது குறித்து அரசாங்கத்திடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே போன்ற திறமை வாய்ந்த ஒருவர் கோவிட் வைரஸ் பரவுவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் சுகாதாரத்துறையில், பெர்ணாண்டோபுள்ளே நிபுணர் என்று தெரிவித்துள்ள சுமந்திரன் இந்த நிலையில் அவர் கோவிட் அமைச்சராக இருந்தபோதிலும், அவர் கூறுவது எதுவும் செயல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வைரஸைக் கையாள்வதில் வல்லவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர், ஆனால் அரசாங்கம், வெளிநாட்டுத் துருப்புக்களுடன் போராடுவது போன்று வைரஸை எதிர்த்துப் போராடுகிறது என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தளபதிக்கு என்ன தெரியும்? சட்டத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என்று சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கோவிட் வைரஸை சமாளிக்கச் சரியான சட்டங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.