நாட்டின் பல பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு! அமைச்சர் வெளியிட்ட காரணம்
இலங்கையில் தற்போது திட்டமிட்ட மின்வெட்டு எதுவும் நடைமுறைபடுத்தப்படவில்லை. மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் திடீர் தொழில்நுட்பக்கோளாறுகளே அவ்வப்போது ஏற்படும் மின் துண்டிப்புகளுக்குக் காரணமாகும்" என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (7) உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு
கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அண்மைக்காலமாக இரண்டு மணித்தியாலங்கள் வரை திடீர் மின்வெட்டு ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது, மக்களிடம் அறிவிக்காமல் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்வது ஏன் என அவர் வினவினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் குமார ஜயக்கொடி,
"தற்போது நிலவும் மின் துண்டிப்புகள் திட்டமிட்டவை அல்ல. மின் விநியோகக் கட்டமைப்பில் அவ்வப்போது ஏற்படும் சில இடையூறுகள் புதிய விடயமல்ல.
மின்சாரக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மின் துண்டிப்பு
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் மின் துண்டிப்புகளை உடனடியாகச் சீர்செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவை திடீர் செயலிழப்புகளே தவிர, திட்டமிட்ட மின்வெட்டு அல்ல.

அரசாங்கம் திட்டமிட்ட மின்வெட்டைச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், அது குறித்த அறிவித்தல் முன்கூட்டியே பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
தற்போதைய நிலையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சியினர் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான கேள்விகளை எழுப்புகின்றனர்." - என்று அமைச்சர் சாடினார்.
மின் துறையை வலுப்படுத்துவதற்கும், இவ்வாறான திடீர் மின் துண்டிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி சபையில் மேலும் சுட்டிக்காட்டினார்.