அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவன்: பாடசாலை சமூகம் நெகிழ்ச்சி
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை மற்றும் மாவட்ட மட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களை பலர் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளனர்.
அதன்படி, பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மகாவித்தியாலயம் மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன், மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற கமலநாதன் மதுமினி ஆகியோரை இன்று (01.04.2026) கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேரில் சென்று மாணவர்களை வாழ்த்திய ஆளுநர்
அதேவேளை, நேற்று (31) வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுத் சாதனை படைத்த கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் தெ. திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று (01.04.2026) கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு பயணம் செய்த ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு. முரளிதரன் ஆகியோரை பாடசாலை அதிபர் திருமதி ஐ. நிமல்ராஜ் வரவேற்றார்.
இந்தப் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ. திருக்குமரன் கணிதப் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் ஆ. கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் க. மதுமினி ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சாதனை மாணவர்களை ஆளுநர் பாராட்டியதுடன், அவர்களின் வெற்றிக்கு காரணமான பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மாணவர்களைப் பாராட்டிய ஆளுநர், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து ஒரு மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருப்பது மாகாணத்தின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயமாகும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தச் சாதனை மாணவர்கள் பிற மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


