கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மாணவி உயிரிழப்பு- சக மாணவிகள் மருத்துவமனையில்..
கிழக்கு பல்கலைக்கழகத்தின், கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(19.08.2026) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவியான கே. யாழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
20 வயது மாணவி உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று(19) பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்தவுடன், அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக உயிரை மாய்த்துக் கொண்ட கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இறப்பு வீதம் அதிகரிப்பு
இந்த நிலையில், மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சைப் பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.