அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் போராட்டம் (Photos)
"கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" என்னும் தொனிப்பொருளில் மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் போராட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல் முனைவின் 49வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (18.09.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டமானது மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கோரிக்கைகள்
எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என்ற கோசங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்திருந்தனர்.
இதில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் லூர்து நாயகம் புவனம், பிரதேச சபை உறுப்பினர் சிறி , சட்டத்தரணி , குறித்த கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, கடற்தொழிலாளர் சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மனு வாசிப்பு
குறித்த செயற்றிட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மனு வாசிக்கப்பட்டதுடன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில்
100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





