வவுனியாவில் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் போராட்டம்
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் 48ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா - நெடுங்கேணி பிரதேசத்தின் புளியங்குளம் கிராமத்தில் மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தே நேற்று (17.09.2022) இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த செயற்றிட்டத்தில் நெடுங்கேணி பிரதேச மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாய, நன்னீர் மீனவ அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இதன் போது நாங்கள் நாட்டை துண்டாடவோ தனி அரசாங்கத்தை கேட்கவில்லை என்றும் இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம், எமக்கு வேண்டும் எங்கள் நிலம், ஒன்று கூடுவது எமது உரிமை மற்றும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும், போன்ற பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த போராட்டம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.