ஈரானின் அணு ஆயுதக் கொள்கையை கண்காணிக்க வலுவான சோதனை முறை
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை நோக்கியதாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய, அங்கு "மிகவும் வலுவான சோதனை மற்றும் கண்காணிப்பு முறையை" ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி வலியுறுத்தியுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஈரான் தங்களின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வந்தாலும், வெறும் வார்த்தைகளை மட்டும் நம்பி சர்வதேச சமூகம் இருக்க முடியாது என்றும், அணுசக்தி தளங்களில் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள தங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடை
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதுதான் என்பதால், இந்த ஆய்வு மிக அவசியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை ஈரான் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

தற்போது மீண்டும் ஆய்வாளர்களை அனுமதிப்பதாக ஈரான் ஒப்புக்கொண்டாலும், குண்டுவீசித் தாக்கப்பட்ட குறிப்பிட்ட அணுசக்தி தளங்களை ஆய்வுசெய்ய இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையில், இந்த ஆய்வுகள் குறித்து அமெரிக்க மற்றும் ஈரான் தரப்பில் முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி "வார்த்தைப் போர்" நடந்து வருகிறது.
அணுசக்தி தளங்களை முழுமையாக ஆய்வு செய்ய ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி வரும் நிலையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முழுமையாக நீக்கினால் மட்டுமே ஐநா சபையின் இந்த ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி தெளிவுபடுத்தியுள்ளார்.