இலங்கையின் பல பகுதிகளில் சுகாதார சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
44 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு செய்தி - முல்லை கீதன்
வவுனியா
வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்களால் இன்று காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவிசாய்க்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா செய்தி - தீசன்
நுவரெலியா
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் தமது உரிமைகளைக் கோரி இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் முற்றத்தில் முன்னெடுத்துள்ளனர்.
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நுவரெலியா செய்தி - திருமால்
பருத்தித்துறை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபுறக்கணிப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை செய்தி - ராகேஷ்
மன்னார்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் செய்தி - ஆஸிக்
திருகோணமலை
திருகோணமலையிலும் இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலை செய்தி - பதுர்தீன் சியானா
மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7500 ரூபா கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார ஊழியர்கள் இன்று வைத்தியசாலைக்கு முன்பாக கனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் பி.பிரபாகரன் தலைமையில் மட்டு. போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து மதிய உணவு விடுமுறை வேளையில் வைத்தியசாலைக்கு முன்னாள் அங்கு கடமையாற்றி வரும் சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மட்டக்களப்பு செய்திகள் - கனகராசா சரவணன்