தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும் - ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!
ஜனாதிபதி நாட்டின் பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என ராஜாங்கனை சத்தாரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விகாரைகளின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது மற்றும் அங்கு இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் குறித்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விசேட காணொளிப் பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல்வாதிகளை வெளியேற்றல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் ராஜபக்சகள், பிரேமதாஸக்கள் மற்றும் விக்கிரமசிங்க ஆகிய அரசியல்வாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றியது, நாட்டின் வளங்களைச் சூறையாடிய ஊழல்வாதிகளை வெளியேற்றி, நாட்டைச் சீரமைப்பதற்காகவே தவிர, புனித தலதா மாளிகை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் நாட்டின் ஏனைய விகாரைகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக அல்ல.
இன்று சமூக வலைத்தளங்களில் வெறும் சுவாரஸ்யத்துக்காகப் பரப்பப்படும் தவறான கருத்துக்களை நம்பி, அரசு இத்தகைய அபாயகரமான முடிவுகளை எடுக்க முற்படக் கூடாது.

குறிப்பாக, கலகெடிவத்தை சுதத் மற்றும் கெக்கிராவ சுதர்சன போன்றவர்கள் முன்வைக்கும் இத்தகைய முட்டாள்தனமான கருத்துக்களைக் கேட்டு அரசு செயற்படுமேயானால், அது இந்த அரசுக்குப் பாரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.
அதேவேளை, விகாரைகளின் நிர்வாகச் சுதந்திரம் குறித்துப் பேசும் நான், சில விகாரைகளுக்குள் இடம்பெறும் அப்பட்டமான தவறுகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
விகாரைகளுக்குள் சிறுவர்களைத் துறவறம் பூணச் செய்து, பின்னர் அவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் அருவருக்கத்தக்க சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
சட்ட நடவடிக்கை
அதேபோல், விகாரைகளுக்கு வரும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண் பக்தர்களைச் சில தரப்பினர் தவறான நோக்கில் அணுகுவதும், விகாரை வளாகங்களுக்குள் வாகனச் சாரதிகள் மற்றும் சில இளைஞர்களை வைத்துக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபடுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
ஒரு பௌத்த பிக்குவானவர், விகாரைக்குத் தர்மம் கேட்டுவரும் தாயையும் மகளையும் மரியாதையுடன் நடத்த வேண்டுமே தவிர, அவர்களைக் தனி அறைகளுக்குள் அழைத்து முறையற்ற வகையில் நடந்துகொள்வது அப்பட்டமான துஷ்பிரயோகமாகும்.

இத்தகைய விகாரைகளில் வாழும் பிக்குகள், தமது தனிப்பட்ட இன்பத்துக்காகவே மதத்தைப் பயன்படுத்துகின்றனர்.
எனவே, விகாரைகளின் நிர்வாக எல்லையைக் கடந்து பௌத்த போதனைகளுக்கு முரணாகவும், இத்தகைய சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து, பொதுச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam