ஊழல்வாதிகளை ஒதுக்கும் அநுர அரசு - அரச அதிகாரிகளுக்கும் கடும் அறிவுறுத்தல்
அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை” எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) அறிமுக நிகழ்வு, இன்று(27.07.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேர்மை என்பது பணம் வாங்காமை மட்டுமலல் ஊழல் செய்யாமையும் மட்டுமல்ல. எமக்காக ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை, எமக்காக அல்லாமல் மக்களுக்காகப் பயன்படுத்துவதே நேர்மையாகும்.
ஒரு ஏழை மனிதனின் கோப்பைக் காரணமின்றித் தாமதப்படுத்தாமல் இருப்பதும், பொது வளங்களைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதும், தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் ஒரே அளவுகோலால் நீதி வழங்குவதுமே உண்மையான நேர்மையாகும்.

சட்டம் பார்க்காத இடத்திலும் மனச்சாட்சி பார்க்கிறது என்ற உணர்வோடு நாம் வாழ வேண்டும். 2022 ஆம் ஆண்டு இந்த நாடு அனுபவித்த “அரகலய” போராட்டத்தின் மையச் சொல் “முறைமை மாற்றம்” என்பதாகும்.
அந்த இரண்டு சொற்களில் ஒரு தலைமுறையின் கனவும், கோபமும், எதிர்பார்ப்பும் அடங்கியிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நேர்மையான நிர்வாகத்துக்கான அரசியல் விருப்பமும், அரசியல் தலைமைத்துவமும் உருவாகியுள்ளது. ஊழலுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கக்கூடாது என்ற தெளிவான நிலைப்பாடு வந்துள்ளது.
ஆனால், அரசியல் நேர்மையாக இருந்தும் நிர்வாகம் நேர்மையற்றதாக இருந்தால், மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி மலராது. அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள் என்று மட்டும் நாம் திருப்தியடைய முடியாது, அதிகாரிகளும் மாற வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, அலுவலக முன்றலில் தேசியக் கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் மற்றும் மாகாணக் கீதம் என்பன இசைக்கப்பட்டன.