பரந்த நோக்குடன் செயற்பட்டு கூட்டுறவு அமைப்பை பலப்படுத்த வேண்டும்
பரந்த நோக்குடன் செயற்பட்டு கூட்டுறவு அமைப்பை பலப்படுத்தினால் யாரிடமும் கையேந்த வேண்டிய தேவை இருக்காது என திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் ந.பிரதீபன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அகம் சமூக பொருளாதார கூட்டுறவுச்சமாசத்தின் கிளைச்சங்கங்களின் வருடாந்த செயற்பாட்டு மீளாய்வு இளைஞர் அபிவிருத்தி அகத்தின் இணைப்பாளர் பொன். சற்சிவானந்தம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தநிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் இந்த அமைப்பை பலமுள்ளதாக அமைக்க வேண்டும். உங்களது பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறு செய்தால் நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய தேவை ஏற்படாது.
உங்களுடைய சமூதாய மேம்பாடுதான் எங்களது குறிக்கோள். இங்கு கலந்து கொண்டுள்ள நாங்கள், அகம், கூட்டுறவு ஆணையாளர், சமூகசேவை அதிகாரிகள், விஎபெக்ற் நிறுவனம் பிரதிநிதிகள் அனைவரது முயற்சி உங்களுடைய சமூதாய மேம்பாடுதான்.
ஆகவே மேலும் சிறந்த முறையில் நீங்கள் ஒன்றுபட்டு கூட்டுறவு கொள்கைக்கிணங்க செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் விஎபெக்ற் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி த.மையூரன்,மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் க.வேல்வேந்தன், மாவட்ட சமூகசேவை அதிகாரி.ஜே.சுகந்தினி, இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் திட்டமுகமையாளர் த.திலீப்குமார், சமாசத்தின் தலைவர் ம.உமாசங்கர் மற்றும் கிளைச்சங்களின் பிரிதிநிகள் என 48 பேர் கலந்து கொண்டனர்.
சேருவில மூதூர், திருகோணமலை கிளைகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட சங்கங்களுக்கு பரிசுப் பொருட்களும வழங்கி வைக்கப்பட்டன.