கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: ஸ்ரீகாந்தா ஆதங்கம்
”கிளிநொச்சியில் சுகாதார பணியாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தின் போது, மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது”என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ‘’இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார பணியாளர்கள் தமது கடமைக்கு ஒழுங்காகவும், உரிய நேரத்திலும் சமூகம் அளிப்பது மிகவும் அவசியமானது.
இந்த விடயம் சொல்லி தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல. இருந்தும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள மறுக்கும் நபர்கள் சிலர், அங்கும் இங்குமாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பது முறையற்ற சமூக விரோத நடவடிக்கை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியாக வேண்டும்.
பாதிப்பு
ஒரு சிலரின் அடாவடித்தனமான செயற்பாடுகளால், வடக்கில் சுகாதார பணியாளர்கள் ஒரு சில மணித்தியாலயங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் சுகாதார சேவை செயல் இழக்குமானால், வைத்தியசாலைகளை நாடி நிற்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி நேயாளிகளின் கதி இன்றைய நெருக்கடி நிலையில் என்னவாகும்.
எனவே இந்த நிலைமையை அடாவடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்போதெல்லாம் எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் ஒழுங்கீனங்களை தட்டி கேட்க சகலருக்கும் உரிமை உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் முன்கூட்டியே பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, எரிபொருள் விநியோக ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. இதில் எவரும் தலையிட்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
சமூகப் பொறுப்பு
கிளிநொச்சியில் அரங்கேறிய சம்பவம் போன்ற நிலைமைகள் எங்கே ஏற்பட்டாலும், அந்த இடங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் சமூக பொறுப்புடன் துணிந்து செயற்பட வேண்டும்.
அடாவடித்தனத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஒருபோதும் இளைஞர்கள் தயங்க கூடாது. சட்டம் கூட அதனை அனுமதிக்கின்றது.
கிளிநொச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுகாதார சேவை பணிப்பாளருக்கு எமது மனவருத்தத்தை நாம் பகிரங்கமாக தெரிவித்துகொள்கின்றோம்.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.