தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை: மோடியை சாடிய ஸ்டாலின்
இலங்கை விஜயத்தின் போது, அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்ததாக தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது என்றும் முதல்வர் சட்டசபையில் இன்று(07.04.2025) உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கடற்றொழிலாளர்களின் விடுதலை கோரிக்கையை எழுப்பியதாகத் தெரியவில்லை. எனவே, இந்த நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
இதன்படி, பிரதமர் மோடி, தமிழக கடற்றொழிலாளர்களை கைவிட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். எனினும் தமிழக கடற்றொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடவுள்ளதாக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் இருந்து திரும்பும் வழியில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்றில் உரையாற்றிய மோடி, கடந்த ஆண்டு கொழும்பிலிருந்து 600க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள், தாயகம் திரும்பி வந்ததாகக் கூறியுள்ளார்.
நெருக்கடியான காலங்களில் பாரத அரசு அவர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது என்றும் மோடி கூறியுள்ளார். இந்திய நடுவண் அரசின் முயற்சிகள் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் 3,700க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் இலங்கையிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அவர்களை உயிருடன் அழைத்து வந்து அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |