மட்டக்களப்பு பாடசாலைக்குள் திடீரென புகுந்த மோப்ப நாய்களால் பரபரப்பு (Video)
நாட்டில் மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதையடுத்து அதனை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பில் பொலிஸார் போதைப்பொருளை தடுப்பதற்கான விசேட நடவடிக்கையின் கீழ் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி மட்டக்களப்பு புனித மைக்கேல் ஆண்கள் தேசிய பாடசாலையில் திடீரென மோப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள்
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பாடசாலைக்குள் உள் நுழைந்த மாணவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாடசாலைக்குள் நுழைந்த மாணவர்கள் திடீரென மோப்ப நாய்கள் இருப்பதை அவதானித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து ஏனைய பாடசாலைகளில் இடம்பெறும் எனவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலதிக தகவல் - குமார்