மத்திய கிழக்கு தாக்குதலில் காயமடைந்த இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்
மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 4 இலங்கை பிரஜைகளும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் காயமடைந்த இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளிவிவகார பிரதி அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்தத் தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நலன்புரி
காயமடைந்தவர்களில் மூவருடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி ஊடாக நேரடியாக உரையாடியுள்ளார்.
அவர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் நான்காவது நபரின் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ள போதிலும், அவரும் சிகிச்சையின் பின் வைத்தியசாலையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையைக் கூர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழலில், அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அமைதியான முறையில் தீர்வுகளை எட்ட வேண்டும் என்றும் இலங்கை எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்குத் தேவையான மேலதிக உதவிகளை வழங்க வௌிவிவகார அமைச்சு தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.