இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பு - வெளியான புதிய தகவல்
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி திருத்தங்கள் காரணமாக எதிர்காலத்தில் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு வாகனத்தின் விலை, இந்த புதிய வரி விதிப்பு முறையால் மேலும் 1.5 முதல் 2 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என்று வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் துணைத்தலைவர்(Vice President) அரோஷா ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
வாகன விலைகள்
இந்த புதிய வரி விதிப்புக் கொள்கை இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு வரும். எனவே, வாகன இறக்குமதி மீதான தற்போதைய சுங்க வரியின் மீது 50% கூடுதல் கட்டணம் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இருப்பினும், நேற்றுக்கு முன்னரான வாகன இறக்குமதிக்காக கடன் கடிதங்கள் (LC) வழங்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய வரி திருத்தம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் விலை உயர்வுக்கு காரணம்
வாகனங்களின் விலை உயர்வுக்கு இந்த புதிய வரி மட்டுமல்ல, அமெரிக்க டொலர், ஜப்பானிய யென் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் போன்ற அந்நிய செலாவணி விகிதங்களில் ஏற்பட்ட விரைவான உயர்வு மற்றும் மே மாதம் விதிக்கப்பட்ட 2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) ஆகியவையும் காரணம் என்று இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, இந்த அனைத்து காரணிகளாலும், வாகனம் வாங்கும்போது நுகர்வோர் தாங்க முடியாத அதிக விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இது சற்றும் எதிர்பார்க்கப்படாத ஒரு சூழ்நிலை என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
மேலும், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜின் கூற்றுப்படி, அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியின் காரணமாக பல்வேறு வாகன மாடல்களின் விலைகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.