தொடருந்து பாதையை கடக்க முயன்ற 22 வயதுடைய யுவதி பலி
மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி படுகாயமடைந்த யுவதியொருவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இரவு 7.00 மணியளவில் மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த தொடருந்து பாணந்துறை நிலையத்திலிருந்து பின்வத்தை நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையடக்கத் தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டு தொடருந்து பாதையில் பயணித்த 22 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் அடையாளம்
குறித்த விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பான விபரங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தொடருந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கறுப்பு நிற காற்சட்டை மற்றும் மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த யுவதியின் சடலம் வாதுவ தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 1990 அவசர சேவையினுடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வாதுவ தொடருந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.