பணிப்புறக்கணிப்பால் சுகாதார சேவைகளில் பாதிப்பு. தொடர் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை
மத்திய மாகாணத்தின் செவிலியர்கள், துணை மருத்துவ சேவையினர், மருத்துவ ஆய்வக நிபுணர்கள் உட்பட்ட துணை சுகாதார சேவைகளின் பணியாளர்கள் இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
வேதன முரண்பாடுகள் மற்றும் அவர்களின் சேவைகளில் உள்ள ஆறு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று வடமேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் எதிர்வரும் நாட்களில் ஏனைய மாகாணங்களுக்கும் தமது தொழிற்சங்க நடவடிக்கையை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார வல்லுநா் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடமேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 7.00 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்தும் பலனில்லை.
இதனையடுத்து இந்த மாதம் அனைத்து மாகாணங்களிலும் அடையாள பணிப்புறக்கணிப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இறுதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.