கோவிட் நான்காவது அலை பரவலின் முதல் கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை
இலங்கை கோவிட் நான்காவது அலை பரவலின் முதல் கட்டத்தை நோக்கி நகர்வதாக இலங்கை மருத்துவ சங்கம் இன்று எச்சரித்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய அவர்,
நான்காவது அலை பரவலுக்கான உடனடி அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.
பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கோவிட் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு இல்லை என்று அவர் கூறினார்.
பயணக் கட்டுப்பாடுகள் 2021, மே 20 அன்று விதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையில் சரிவைக் காண முடிந்தது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்த படி, எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், மருத்துவமனை வலையமைப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கருத்தில் பார்க்கும் போது , நாடு கொரோனா நான்காவது அலையை நோக்கி நகர்கிறது என்பது தெளிவாகிறது, என்று அவர் தெரிவித்தார்.
டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்துள்ளது.இந்த மாறுபாடு ஏற்கனவே 50% க்கும் அதிகமான மக்களுக்கு பரவியுள்ளது.
இது நாட்டின் முக்கிய மாறுபாடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் வைத்தியர் குணரத்ன மேலும் கூறினார்.