ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வலி.தெற்கு பிரதேச சபையின் பாதீடு
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது 30 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபையின், நேற்றைய அமர்வில் 25 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட 194470 மில்லியன் பெறுமதியான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவினை வழங்கியதால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் கலந்து கொண்டிருக்கவில்லை.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 11
உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஈழ
மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 4
உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்களும் மற்றும் தமிழர்
விடுதலை கூட்டணியின் 2 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.