இலங்கையில் வெடித்து சிதறிய ஈரான் கப்பல்! சிதைவடையும் சடலங்கள்: இராஜதந்திர தாமதத்தால் சிக்கல்
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலில் உயிரிழந்த 87 கடற்படையினரின் உடல்களை பாதுகாப்பதில் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
இவ்விடயம் குறித்து வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.டி.யு.எம். ரங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
பிரேத அறையில் பாதுகாப்பாக வைப்பதில் நெருக்கடி
"ஒரே நேரத்தில் 87 உடல்கள் கொண்டு வரப்பட்டமையால், அவற்றைப் பிரேத அறையில் பாதுகாப்பாக வைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் போதிய குளிரூட்டி வசதிகள் இல்லாத நிலையில், உடல்கள் சிதையாமல் இருக்கத் தற்காலிக ஏற்பாடுகள் மூலம் அவை தற்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த உடல்களை இன்னும் எவ்வளவு காலத்துக்கு வைத்தியசாலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து எமக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் ஈரானியத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று வரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் பற்றி எமக்குத் தெரியாது.
இலங்கையிலேயே அடக்கம் செய்ய அனுமதி
இந்த உடல்களை இலங்கையிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டால், மாநகர சபை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் ஒரே நாளில் அந்தப் பணிகளை எம்மால் நிறைவு செய்ய முடியும்.
ஆனால், உடல்களைத் திருப்பி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டால், அவற்றை நீண்டகாலம் பாதுகாப்பது வைத்தியசாலை நிர்வாகத்துக்குப் பெரும் சுமையாக அமையும்." என்றார்.
இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்களே தற்போது இராஜதந்திரத் தீர்மானங்களுக்காகக் காத்திருக்கும் நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.